கிளார்க்: தென்கிழக்காசிய போட்டிகளின் திடல்தட ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சிங்கப்பூரின் சாந்தி பெரேரா வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார்.
நேற்று நடந்த 200 மீட்டர் இறுதிப் போட்டியில் அவர் 23.77 வினாடிகளில் போட்டியை முடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் பிலிப்பீன்ஸின் கிறிஸ்டினா நாட் 23.01 வினாடிகளில் முடித்து முதல் இடத்தைப் பிடித்தார்.
இரண்டாவது இடத்தை நடப்பு வெற்றியாளரான வியட்னாமின் லி து சின் பெற்றார்.
இதற்கு முன்னதாக நடந்த திடல்தடப் போட்டியில் கிறிஸ்டினா நாட், சாதனை நேரமாக 23.07 வினாடிகளில் ஓடி முடித்தார்.
மூன்றாவது இடத்தைப் பிடித்த சாந்தி பெரேரா 23.94 வினாடிகளில் ஆட்டத்தை முடித்தார்.
பெரேரா இதற்கு முன்பு கோலாலம்பூரில் நடந்த போட்டி ஒன்றில் 23.68 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்றார். அத்துடன் 2017ஆம் ஆண்டு நடந்த விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தூர திடல்தடப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
30வது தென்கிழக்கு ஆசியப் போட்டியில் சாந்தி பெரேரா பெற்றுள்ள வெண்கலப் பதக்கமே சிங்கப்பூரின் திடல்தட ஓட்டப்பந்தயப் போட்டிக்குக் கிடைத்த முதல் பதக்கமாகும்.