மணிலா: பிலிப்பீன்சில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான மேசைப்பந்து போட்டியில் சிங்கப்பூர் ஒரு தங்கப் பதக்கம் கூட வெல்லவில்லை.
ஆண்களுக்கான மேசைப்பந்து போட்டியில் சிங்கப்பூரின் ஜோஷ் சுவா மற்றும் கோயன் பாங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மலேசியாவின் அஷ்ரஃப் ஹைகல் ரிஸல் - வோங் ஷென் இணையை 3-2 (6-11, 11-6, 11-9, 6-11, 11-6) என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தனர்.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் இரட்டையர் மேசைப்பந்துப் பிரிவில் சிங்கப்பூர் கடந்த இருபது ஆண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தது.
ஆனால் இந்த ஆண்டில் அதிர்ச்சியூட்டும் வகையில் திடீரென சிங்கப்பூரின் அந்த ஆதிக்கம் கைநழுவிப் போய்விட்டது.
இருப்பினும் பெண்கள் இரட்டையர் பிரிவில் சிங்கப்பூரின் ஃபெங் தியான்வெய் - லின் இயே மற்றும் கோய் ரூய் ஸுவான் - வோங் ஸின் ரூ ஆகிய இரண்டு இணைகளும் சிறப்பாக விளையாடி அரை இறுதி ஆட்டம் வரை சென்றனர்.
அந்த ஆட்டத்தில் தாய்லாந்து இரட்டையர்களிடம் மோதி வெற்றி பெறும் நிலைக்குச் சென்று கடைசியில் தோல்வியைத் தழுவினர்.
1997ஆம் ஆண்டுக்குப் பிறகு மேசைப்பந்துப் போட்டியின் இரட்டையர் பிரிவில் சிங்கப்பூர் பெண்கள் தங்கத்தைத் தவற விட்டிருப்பது இதுவே முதல்முறை.