மான்செஸ்டர்: நேற்று அதிகாலை மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவின் மைதானமான எட்டிஹாட்டில் அதை எதிர்கொண்ட மான்செஸ்டர் யுனைடெட் குழு சிங்கத்தின் குகைக்குள் சென்று வெற்றிக் ெகாடி நாட்டி வந்துள்ளது என்று கூறுமளவுக்கு சிட்டி குழுவை பந்தாடிவிட்டுத் திரும்பியுள்ளது.
சென்ற காற்பந்துப் பருவத்தின் வெற்றியாளர்களான சிட்டி குழுவினரிடம் சற்றும் அச்சம் கொள்ளாமல் எடுத்த எடுப்பிலேயே தாக்குதலில் ஈடுபட்டு முதல் பாதி ஆட்டம் முடியுமுன்னே இரண்டு கோல்கள் போட்டு சிட்டியை திக்கு முக்காட வைத்தது மான்ெசஸ்டர் யுனைடெட் குழு.
யுனைடெட் முன்னணித் தாக்குதல் வீரர்களான மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட்டும் ஆண்டனி மார்சியாலும் முறையே 23, 29ஆம் நிமிடங்களில் போட்ட கோல்களிலிருந்து சிட்டி குழுவால் இறுதிவரை மீள முடியவில்லை.
இடையே, 85ஆம் நிமிடத்தில் சிட்டிக்கு மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஒட்டாமென்டி என்ற வீரர் தமது அணியின் சார்பாக ஒரு கோல் போட்டாலும் அது சிட்டிக்கு ஆறுதல் கோலாகவே விளங்கியது.
நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் சிட்டியின் தற்காப்பு அரணை மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம்போல் தகர்த்தது பார்ப்போரை பரவசப்படுத்தியது.
சிட்டியின் கோல்காப்பாளர் எடர்சன் மட்டும் சிட்டியின் உதவிக்கு வந்து யுனைடெட்டின் இரண்டு, மூன்று கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியிராவிடில் சிட்டியின் பாடு படு திண்டாட்டமாகி இருக்கும் என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.
சிட்டியின் கோல் கம்பத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த யுனைடெட்டின் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட்டை சிட்டியின் பெர்னார்டோ சில்வா தேவையில்லாமல் தடுக்கிவிட யுனைடெட்டுக்கு ஆட்டத்தின் 23ஆம் நிமிடத்திலேயே பெனால்டி வாய்ப்புக் கிட்டியது.
அதை ரேஷ்ஃபர்ட் அருமையாக கோலாக்கினார்.
அதற்கு அடுத்த ஆறாவது நிமிடத்திலேயே யுனைடெட் குழுவின் டேனியல் ஜேம்ஸ் கொடுத்த பந்தை மார்சியால், அவரை சிட்டியின் இரண்டு, மூன்று தற்காப்பு வீரர்கள் சூழ்ந்திருந்த நிலையிலும் சுதாரித்துக்கொண்டு உதைத்து பந்தை கோல் வலைக்குள் செலுத்தினார்.
பெப் கார்டியோலா நிர்வாகியாக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் சிட்டி இவ்வளவு சீக்கிரம் இரண்டு கோல்களை விட்டுக்கொடுத்தது இல்லை என்று பிபிசி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
இந்த நிலை மான்செஸ்டர் சிட்டி குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் பிறகு மான்செஸ்டர் சிட்டி குழு மத்திய திடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கினாலும், நிலைமையை அந்தக் குழுவினரால் சரிசெய்ய முடியவில்லை.
பல சந்தர்ப்பங்களில் சிட்டி குழுவினர் யுனைடெட்டின் கோல் வலை நோக்கி அடித்த பந்தை யுனைடெட் வீரர்களின் தற்காப்பு அரண் அவற்றைத் தகர்த்து எறிந்தது.
இது யுனைடெட்டுக்கு எதிரணி மைதானத்தில் இந்தப் பருவத்தில் கிடைத்த முதல் வெற்றியாகும்.
அத்துடன், பிரிமியர் லீக் தர
வரிசையில் முக்கிய குழுக்களாக விளங்கும் செல்சி, லெஸ்டர், மான்செஸ்டர் சிட்டி ஆகிய குழுக்களை அது வெற்றி கொண்டுள்ளது.
லிவர்பூல் அணியை மட்டுமே அது வெற்றி கொள்ளவில்லை. எனினும், அதனுடனான போட்டியில் 1-1 என சமநிலை கண்டதால் அது குறிப்பிடத்தக்க ஒன்று எனலாம்.
இந்த ஆட்டம் பற்றிக் கருத்துரைத்த யுனைெடட் நிர்வாகியான சோல்சியார், “இது மறக்க முடியாத ஆட்டம்.
“உலகின் மிகச் சிறந்த அணிகளுள் ஒன்றான மான்செஸ்டர் சிட்டியுடனான போட்டியில் எங்கள் வீரர்கள் பந்தை எடுத்து சிட்டி கோல் வலையை நோக்கிச் செல்லும்போது நாங்கள் தடுக்க முடியாத சக்தியாக விளங்கியுள்ளது மறக்க முடியாத ஒன்று,” என்று கூறினார்.
மற்ற மூன்று ஆட்டங்களில் லிவர்பூல், போர்ன்மத் குழுவை 3-0, ஸ்பர்ஸ் பர்ன்லியை 5-0, செல்சியை எவர்ட்டன் குழு 3-1 என்றும் வெற்றி கொண்டன.