திருவனந்தபுரம்: களக்காப்பு மோசமாக இருந்தால் எவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயித்தாலும் வீண்தான் என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீசிடம் இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோற்ற பிறகு பேசிய கோஹ்லி இவ்வாறு சொன்னார். "இன்னும் 15 ஓட்டங்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் களக்காப்பு மோசமாக இருந்தால் எவ்வளவு ஓட்டமெடுத்தாலும் போதாது.
"கடந்த 2 போட்டிகளிலும் களக்காப்பு எதிர்பார்த்த தரத்தில் இல்லை. முதல் 4 ஓவர்களில் நன்றாக வீசினோம், நெருக்கடி கொடுத்தோம். "பிறகு ஒரே ஓவரில் 2 'கேட்ச்' களை கோட்டைவிட்டோம், அதுவும் 20 ஓவர் போட்டியில்.
"இதற்கான விலையைத்தான் கொடுத்தோம். 2 விக்கெட்டுகளை ஒரே ஒவரில் வீழ்த்தியிருந்தால் அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும்.
"நாம் எங்கு தவறு செய்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். களக்காப்பில் முன்னேற்றம் தேவை. அதில் தைரியமாக இருக்க வேண்டும்.
"வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடுகளத்தைப் பிரமாதமாக கணித்தனர். பந்துவீச்சில் கட்டர்கள், வேகத்தில் மாற்றம் என்று எங்களை அவர்கள் எழுச்சி பெறவிடவில்லை.
"வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்த வெற்றிக்குத் தகுதியானவர்கள்," என்றார் கோஹ்லி.
இப்போட்டியை 8 விக்கெட்டு வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என்று சமன் செய்து அடுத்த போட்டியில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
புவனேஷ்வர் குமார் வீசிய 5வது ஓவரில் 2 'கேட்சு'கள் தவறவிடப்பட்டதால் இந்திய அணி வெற்றியைப் பறிகொடுக்க நேர்ந்தது. சிம்மன்ஸ் 6 ஓட்டங்கள் எடுத்து இருந்தபோது வாஷிங்டன் சுந்தர் அவரை ஆட்டமிழக்கச் செய்யும் எளிதான 'கேட்ச்' வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து, தொடர்ந்து விளையாடிய லெண்டில் சிம்மன்ஸ் ஆட்டமிழக்காமல் இருந்து 45 பந்துகளில் 67 ஓட்டங்கள் என அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார்.
அதே ஒவரில் ரிஷப் பன்ட் கடினமான 'கேட்ச்' வாய்ப்பைத் தவற விட்டார். அப்போது எவின் லுவிஸ் 16 ஓட்டங்களில் இருந்தார். தொடர்ந்து 17வது ஓவரில் நிக்கலஸ் பூரனை ஆட்டமிழக்கச் செய்யும் வாய்ப்பை ஷ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டார். இந்த தவறுகள் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்தன.
முதலில் பந்தடித்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுத்தது.
இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 173 ஓட்டங்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கியது.