லண்டன்: முதலில் கோலை விட்டுக்கொடுத்தபோதும் பிற்பாதியில் ஒன்பது நிமிடங்களில் மூன்று கோல்களைப் போட்டு 3-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹேம் யுனைடெட் காற்பந்துக் குழுவை வீழ்த்தியது ஆர்சனல் காற்பந்துக் குழு.
இதன்மூலம் 42 ஆண்டுகளில் இல்லாத தொடர் தோல்விக்கு ஆர்சனல் முற்றுப்புள்ளி வைத்தது.
நிர்வாகி பதவியிலிருந்து உனாய் எமெரி நீக்கப்பட்டதை அடுத்து, ஆர்சனலின் இடைக்கால நிர்வாகியாக அதன் முன்னாள் ஆட்டக்காரர் ஃபிரெடி லுங்பெர்க் நியமிக்கப்பட்டார். அவரின்கீழ் ஆர்சனல் பெற்ற முதல் வெற்றி இதுதான்.
முற்பாதி ஆட்டம் முடிய ஏழு நிமிடங்கள் இருந்தபோது வெஸ்ட் ஹேம் வீரர் ஏஞ்சலோ ஒக்போனோ தலையால் முட்டி கோலடித்தார்.
ஆயினும் பிற்பாதியில் மீண்டு எழுந்தது ஆர்சனல். ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் 18 வயதான பிரேசில் வீரர் கேப்ரியல் மார்ட்டினெல்லி கோலடித்து ஆட்டத்தைச் சமனுக்குக் கொண்டு வந்தார். இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் மார்ட்டினெல்லி அடித்த முதல் கோல் இதுதான்.
அதன்பின் 66வது நிமிடத்தில் நிக்கலஸ் பெப்பேயும் 69வது நிமிடத்தில் பியர் எமெரிக் ஒபமெயாங்கும் ஆளுக்கு ஒரு கோலை அடித்து ஆர்சனலின் வெற்றியை உறுதி செய்தனர்.
கடைசியாக ஆடிய பத்து ஆட்டங்களில் ஆர்சனலுக்குக் கிடைத்த முதல் வெற்றி இதுதான்.
இதையடுத்து, 22 புள்ளிகளுடன் பட்டியலின் ஒன்பதாம் இடத்திற்கு அக்குழு முன்னேறியது.
போட்டிக்குப் பின் கருத்துரைத்த லுங்பெர்க், “தொடர் தோல்வியால் ஆர்சனல் வீரர்கள் நம்பிக்கை இழந்துவிடவில்லை. அவர்கள் கடுமையாகப் போராடினர். மார்ட்டினெல்லியின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவர் ‘டியூராசெல் பேட்டரி’ போல தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்,” என்றார்.
முன்னணி தாக்குதல் ஆட்டக்காரரான அலெக்சாண்டர் லக்காஸெட் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக நிக்கலஸ் பெப்பே சேர்க்கப்பட்டது குறித்துக் கேட்டதற்கு, “லக்காஸெட் திறமையான ஆட்டக்காரர். ஆனாலும், சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது,” என லுங்பெர்க் சொன்னார்.
முதல் அறுபது நிமிட ஆட்டத்தில் தமது குழுவே ஆதிக்கம் செலுத்தியது என்ற வெஸ்ட் ஹேம் நிர்வாகி மேனுவல் பெலக்ரினி, ஆனாலும் காற்பந்து என்றால் இப்படித்தான் என்றும் தற்காப்பில் இழைத்த சில தவறுகள் வெற்றியைத் தங்களிடம் இருந்து பறித்துவிட்டது என்றும் சொன்னார்.
அடுத்ததாக, வரும் வெள்ளிக் கிழமை அதிகாலை நடக்கவுள்ள யூரோப்பா லீக் ஆட்டத்தில் பெல்ஜியத்தின் ஸ்டேண்டர்ட் லீக் குழுவுடன் ஆர்சனல் மோதவிருக்கிறது.