மான்செஸ்டர்: ஐந்து முறை ‘பேலன் டி ஓர்’ பட்டம் வென்ற போர்ச்சுகல் காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உடன் இங்கிலாந்து இளம் வீரர் மார்க்கஸ் ரேஷ்ஃபர்டை ஒப்பிட்டுப் பேசியுள்ளார் மான்செஸ்டர் யுனைடெட் குழு நிர்வாகி ஒலே குனார் சோல்சியார்.
கடந்த வார இறுதியில் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் யுனைடெட் 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி குழுவை வீழ்த்தியது. இப்போட்டியிலும் அடித்த கோலுடன் சேர்த்து நடப்பு இபிஎல்லில் மட்டும் பத்து கோல்களை அடித்து இருக்கிறார் ரேஷ்ஃபர்ட்.
“ரொனால்டோவுடன் ரேஷ்ஃபர்டை ஒப்பிடுவது மிகவும் எளிது. திறமை, உடற்தகுதி, மனப்பான்மை, குணநலன்கள் என எல்லா விஷயங்களிலும் ரேஷ்ஃபர்ட், ரொனால்டோவுக்கு நிகராக இருக்கிறார். ரேஷ்ஃபர்ட் உலகின் முன்னணி ஆட்டக் காரராக உருவெடுக்க நல்ல வாய்ப்பு உள்ளது. தமது சிறப்பான ஆட்டத்தை அவர் தொடர்வார் என நம்புவோம்,” என்றார் சோல்சியார்.
இபிஎல் பட்டியலில் ஐந்தாம் இடத்திலிருக்கும் யுனைடெட், வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை நடக்கும் யூரோப்பா லீக் ஆட்டத்தில் அல்க்மார் குழுவுடன் பொருதவுள்ளது.