புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கம் வென்றவர் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ரவிக்குமார்.
ஊக்கமருந்து சோதனையில் ரவிக்குமார், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியது தெரியவந்தது.
இதனால் அவருக்கு இரண்டாண்டு வரை விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு சில தினங்களில் அவருக்கு என்ன தண்டனை என்பதை அறிவிக்க இருக்கிறது.
தலைவலி மற்றும் ரத்தகொதிப்புக்காக மருத்துவர் தந்த மருந்துகளைச் சாப்பிட்டதாகவும் உலக ஊக்கமருந்து தடுப்புக் கழகத்தால் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இருந்த மருந்தைக் கவனக்குறைவாக உட்கொண்டது பின்னர் தான் தெரியவந்தது என்று ரவிக்குமார் கூறினார்.
“எனது விளக்கத்தைத் தேசிய ஊக்கமருந்துத் தடுப்புக் கழகம் புரிந்துகொண்டுள்ளது. வேண்டுமென்றே ஊக்கமருந்தைச் சாப்பிடவில்லை. கவனக்குறைவாகத் தவறு நடந்துவிட்டதை சுட்டிகாட்டியுள்ளேன்.
“அதனால் குறைந்த தண்டனை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்,” என்றும் ரவிக்குமார் குறிப்பிட்டார்.