தென்கிழக்காசிய விளையாட்டின்போது நேரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய சிங்கப்பூர் காற்பந்து வீரர்களின் பெயர்களை வெளியிட்டது அதிர்ச்சி அளிப்பதாக சிங்கப்பூர் ஒலிம்பிக் மன்றத்தின் தலைமைச் செயலாளர் கிறிஸ் சான் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம், ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக அவ்வாறு செய்தது சரியான முடிவுதான் என்று கூறியுள்ளது.
விளையாட்டாளர்களிடம் எழுத்துபூர்வமாகவும் வாய்மொழியாகவும் ஒப்புதல் பெற்ற பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு மேலோட்டமாக எடுக்கப்படவில்லை.
வீரர்களின் விதிமீறலில் சிறு ஐயம் எழுந்திருந்தால்கூட குற்றமற்றவர் தண்டிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் அவர்களின் பெயர்களைச் சங்கம் அறிவித்திருக்காது என்று சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
நேரக்கட்டுப்பாட்டை மீறிய விளையாட்டாளர்களின் பெயர்களை வெளியிடுவது தேவையான ஒன்று.
சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் அதன் பங்குதாரர்களிடம் மட்டும் பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடந்துகொண்டால் போதாது. பொதுமக்களிடமும் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சங்கத்தின் பேச்சாளர் மேலும் கூறினார். சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம். அதே வேளையில் காற்பந்துச் சங்கத்திற்கும் ஒழுங்கு நடவடிக்கையைச் செயல்படுத்த சம உரிமை உள்ளது,” என்றார் அவர்.