சென்னை: இந்திய அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு எனக் கருதப்பட்ட நிலையில், ஆட்டத்தின் முடிவோ வேறாக அமைந்தது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஷிம்ரன் ஹெட்மயர், ஷே ஹோப் என இருவர் சதமடிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியைத் தோற்கடித்தது.
நாணய சுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணித்தலைவர் கைரன் பொல்லார்ட் முதலில் தமது அணி பந்து வீசும் என அறிவித்தார்.
இதையடுத்து, பந்தடிக்கத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் எதிர்பார்த்தபடி அமையவில்லை. ராகுல் ஆறு ஓட்டங்களுடனும் அணித்தலைவர் விராத் கோஹ்லி (படம்) நான்கு ஓட்டங்களுடனும் நடையைக் கட்டினர்.
சிறிது நேரம் தாக்குப் பிடித்த இன்னொரு தொடக்க வீரர் ரோகித் சர்மா 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பன்டும் பொறுப்புடன் ஆடினர். ஷ்ரேயாஸ் 70 ஓட்டங்களையும் ரிஷப் 71 ஓட்டங்களையும் எடுத்தனர். கேதார் ஜாதவ் 40 ஓட்டங்களைக் குவிக்க, இந்திய அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 287 ஓட்டங்களைச் சேர்த்தது.
அடுத்து பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷே ஹோப்பும் சுனில் அம்பிரிசும் களமிறங்கினர்.
ஒன்பது ஓட்டங்களுடன் அம்பிரிஸ் வெளியேறினார். ஆயினும், ஹோப்புடன் ஹெட்மயர் இணைந்ததும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
ஒருமுனையில் ஹோப் மந்தமாக ஓட்டம் சேர்த்தாலும் மறுமுனையில் ஹெட்மயர் அதிரடியாக ஆடினார்.
பொறுப்புடன் ஆடுவதில்லை எனத் தம்மை விமர்சித்தவர்களுக்குப் பதிலடி தருவதாக அமைந்தது ஹெட்மயரின் சதம். அதன்பின் அவர் கொடுத்த எளிதான ‘பிடி’ வாய்ப்பை ஷ்ரேயாஸ் நழுவவிட்டார்.
பின்னர் சிக்சர்களாக விளாசிய ஹெட்மயர் 139 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் முகம்மது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆனாலும், இன்னொரு அதிரடி வீரரான நிக்கலஸ் பூரன் மேலும் விக்கெட் விழாமல் தடுத்து, ஷே ஹோப்புடன் சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பூரன் 29 ஓட்டங்களையும் ஹோப் 102 ஓட்டங்களையும் எடுத்தனர். ஹெட்மயர் ஆட்ட நாயகனானார்.
‘ரன் அவுட்’ சர்ச்சை: கோஹ்லி கோபம்
முன்னதாக, இந்திய அணி பந்தடித்தபோது ரவீந்திர ஜடேஜா ‘ரன் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார். முதலில் கள நடுவர் ‘அவுட்’ கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால், மறுஒளிபரப்பில் ஜடேஜா‘அவுட்’ எனத் தெரிந்தது. அதன்பின், மூன்றாவது நடுவர் ‘அவுட்’ என அறிவித்தார். இதனால் அதிருப்தியடைந்த கோஹ்லி, “கிரிக்கெட்டில் இதற்குமுன் இப்படி ஒரு நிகழ்வை நான் கண்டதில்லை,” என கோபமாக கூறினார்.