டோஹா: ஃபிஃபா குழு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி அரையிறுதிச் சுற்றில் நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மெக்சிகோவின் மாண்டெரே குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
வடஅமெரிக்க, மத்திய அமெரிக்க, கரீபிய நாடுகளில் விளையாடும் முன்னணி காற்பந்துக் குழுக்களுக்கான CONCACAF சாம்பியன்ஸ் லீக் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அப்போட்டியின் வெற்றியாளராக மாண்டெர்ரே உள்ளது.
கத்தார் தலைநகர் டோஹாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே எதிர்பார்த்தபடி லிவர்பூல் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் நேபி கீட்டா லிவர்
பூலுக்காக முதல் கோலைப் போட்டார். எனினும், அர்ஜெண்டின வீரர் ரோஜிலியோ மோரி மூன்றே நிமிடங்களில் மாண்டெரேவுக்காக கோலைப் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார்.
அதையடுத்து அக்குழு வீரர்
களுக்குப் புதுத்தெம்பு கிடைத்த நிலையில், நீண்ட நேரத்திற்கு லிவர்பூலின் வேகத்திற்கு சிறப்பாக ஈடுகொடுத்தனர்.
கூடுதல் நேரத்தை ஆட்டம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில், ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ரொபேர்ட்டோ ஃபர்மினோ, 91வது நிமிடத்தில் கோலைப் போட்டு லிவர்பூலின் வெற்றிக்கு வித்திட்டார்.
நடப்பு பருவத்தின் பரபரப்பான தருணத்தில் லிவர்பூல் உள்ளதால், இந்த ஆட்டத்தில் லிவர்பூல் வென்றது குறித்து அதன் நிர்வாகி யர்கன் கிளோப் பெருமூச்சு விட்டார்.
“நல்ல வேளை! ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் செல்லவில்லை,” என்று அவர் கூறினார்.