கத்தார்: காற்பந்துக்கான சூப்பர் கிண்ணப் பட்டத்தை வெல்வதற்கான போட்டியில் ஐரோப்பிய குழுவான லிவர்பூலும் தென்னமெரிக்க குழுவான ஃபிளமெங்கோவும் இன்றிரவு மோதுகின்றன.
லிவர்பூல், ஃபிளமெங்கோ குழுக்களின் இந்த மோதல் முதன்முறை அல்ல. கண்டங்களுக்கிடையிலான கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் 1981ல் இக்குழுக்கள் ஏற்கெனவே மோதியுள்ளன.
ஜப்பானில் நடைபெற்ற அப்போட்டியில் லிவர்பூலை 3-0 என வீழ்த்தி கிண்ணத்தை வென்றிருந்தது ஃபிளமெங்கோ.
எனவே இன்றைய போட்டியில் லிவர்பூல் வெற்றிபெற்றால், அக்குழுவிற்கு அது இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
1981ல் ஃபிளமெங்கோவிடம் அடைந்த தோல்விக்குப் பழி தீர்த்ததாக மட்டுமல்லாமல், 2005ல் சாவ் பாலோ குழுவிடம் பறிகொடுத்த சூப்பர் கிண்ணத்தைக் கைப்பற்றிய தாகவும் அமையும்.
ஆனால் அந்த இரட்டிப்பு மகிழ்ச்சியை அனுபவிக்க லிவர்பூலின் தற்காப்பு அரண், ஃபிளமெங்கோவின் முன்வரிசை வீரர்களிடம் தாக்குப்பிடிக்க வேண்டும்.
ஏனெனில், அரையிறுதியில் மெக்சிகோவின் மோன்டர்ரே குழுவால் லிவர்பூலின் தற்காப்பு அரண் பலமுறை தகர்க்கப்பட்டது.
குறிப்பாக மோன்டர்ரே வீரர் ஃபியூனஸ் மோரி போட்ட கோல் லிவர்பூலின் வெற்றியைத் தாமதப்
படுத்தியது.
அதேபோல் இன்றைய ஆட்டத்திலும் ஃபிளமெங்கோவின் புருனோ ஹென்ரிக் லிவர்பூலின் தற்காப்பு அரணைத் தகர்த்து கோல் போடக்கூடும்.
அல் ஹிலால் குழுவை வீழ்த்தி ஃபிளமெங்கோ இறுதிப் போட்டிக்கு முன்னேற இவரும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, காயம் காரணமாக லிவர்பூலின் வேன் டைக் பயிற்சியில் இருந்து வெளியேறிய நிலையில், இன்றைய ஆட்டத்திலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
லிவர்பூலின் தற்காப்பு அரணைத் தகர்க்க ஃபிளமெங்கோவும் வலுவான நிலையில் உள்ளதால், இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
முன்னதாக, மூன்றாவது இடத்திற்கான போட்டியில் அல் ஹிமாம், மோன்டர்ரே குழுக்கள் மோதுகின்றன.