லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்து லீக்கில் இன்றிரவு நடக்கும் ஆட்டமொன்றில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்-செல்சி குழுக்கள் மோதவிருக்கின்றன.
இந்த ஆட்டம், இரு குழுக்களுக்கு இடையிலான மோதலாக மட்டும் பார்க்கப்படாமல் குரு-சிஷ்யன் இடையிலான போட்டியாகவும் கருதப்படுகிறது.
ஒரு காலத்தில் செல்சி குழுவின் நிர்வாகியாக ஜோசே மொரின்யோ இருந்தபோது அவரது பயிற்சியின்கீழ் விளையாடிய இங்கிலிஷ் ஆட்டக்காரர் ஃபிராங்க் லாம்பார்ட்தான் அக்குழுவின் இப்போதைய நிர்வாகி. அதே வேளையில், ஸ்பர்ஸ் குழுவின் இப்போதைய நிர்வாகியாகச் செயல்பட்டு வருகிறார் மொரின்யோ.
செல்சி குழுவின் நிர்வாகியாக மொரின்யோ இருந்தபோது அக்குழு மூன்று முறை பிரிமியர் லீக் பட்டத்தைக் கைப்பற்றியது. அதனால், செல்சி ரசிகர்கள் மத்தியில் மொரின்யோவுக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. அதை மொரின்யோவும் அறிவார்.
இந்த நிலையில், இன்று தமது முன்னாள் குழுவுக்கு எதிராக மோதவிருக்கும் சூழ்நிலையில், மொரின்யோ ஆட்டத்தை விட்டுக்கொடுத்துவிடுவாரா என ஸ்பர்ஸ் ரசிகர்களின் மனதில் சிறு நெருடல் ஏற்படலாம். ஆனால், “அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். நான் இப்போது முழுக்க முழுக்க உங்களில் ஒருவன்,” என உறுதிபடத் தெரிவித்துள்ளார் மொரின்யோ.
“எனது முன்னாள் குழுக்களுக்குச் சிறிதும் இடம் கொடுக்கமாட்டேன். அக்குழுக்களின் நிர்வாகியாக இருந்தபோது முழு அர்ப்பணிப்புடன், உயிரைக் கொடுத்து பணியாற்றினேன். அதேபோலத்தான் இப்போதும் இருப்பேன். எந்தக் குழுவின் நிர்வாகியாக இருக்கிறேனோ, அந்த நேரத்தில் அதுதான் என்னுடைய குழு. அந்த வகையில், இப்போது நான் 100% ஸ்பர்ஸ் குழுவினன்,” என்று மொரின்யோ கூறினார்.
எதிரணி நிர்வாகியாக தம்முடைய சீடன் லாம்பார்ட் இருந்தாலும், ஆட்டம் முடிந்தபிறகு சேர்ந்து பானம் அருந்த அவரை அழைக்கமாட்டேன் என்றார் அவர்.
“லாம்பார்ட் மீது நான் கொண்டுள்ள நேசம் எப்போதும் மாறாது. அதே வேளையில், இன்று அவர் என்னிடம் தோற்பார் என நம்புகிறேன்,” என்றும் மொரின்யோ சொன்னார்.
இதனிடையே, தமது முன்னாள் குருவின் ஆட்ட பாணியைக் கையாண்டு, அவரது நகல்போலச் செயல்படமாட்டேன் என்று செல்சி நிர்வாகி லாம்பார்டும் சொல்கிறார்.
“மொரின்யோவை எதிர்த்து நிற்க இருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆட்டக்காரனாக இருந்தபோது அவரது பயிற்சியின்கீழ் விளையாடுவதை விரும்பினேன். எனது காற்பந்து வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர்தான். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம். ஆனாலும், காற்பந்துத் திடலில் அவரது பாணியையே நானும் பின்பற்றமாட்டேன்,” என்றார் லாம்பார்ட்.
இன்றைய ஆட்டம் நான்காமிடத்திற்க