கட்டாக்: ஒரே ஆண்டில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பொருதிய கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் நேற்று நடைபெற்றது. இப் போட்டிக்கு முன் இந்த ஆண்டில் ரோகித் சர்மா 3 வடிவிலான போட்டிகளில் தொடக்க வீரராக 2,379 ஓட்டங்களை எடுத்திருந்தார். இன்னும் அவர் 9 ஓட்டங்கள் எடுத்தால் ஒரே ஆண்டில் தொடக்க வீரராகக் களம் இறங்கி அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைக்கும் வாய்ப்புடன் நேற்று களம் இறங்கினார். 316 ஓட்ட இலக்குடன் ரோகித் சர்மா - லோகேஷ் ராகுல் ஜோடி களம் இறங்கியது.
ரோகித் சர்மா 10 பந்துகளில் 9 ஓட்டங்களை எட்டினார். அப்போது 22 ஆண்டுகால ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்தார். இலங்கை முன்னாள் தொடக்க வீரரான ஜெயசூர்யா 1997ஆம் ஆண்டில் 2,387 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.