உல்வர்ஹேம்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள மான்செஸ்டர் சிட்டி கொண்டிருக்கும் கனவு கிட்டத்தட்ட முற்றிலும் கலைந்த நிலையில் உள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் உல்வ்ஸ் என்று அழைக்கப்படும் உல்வர்ஹேம்டன் வாண்டரர்ஸ் குழுவுடன் அது மோதியது.
ஆட்டத்தின் 12வது நிமிடத்திலேயே சிட்டிக்குச் சோதனை ஏற்பட்டது. கோல்காப்பாளர் எடர்சனுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டதால் அவர் ஆட்டத்தைவிட்டு வெளியேறினார்.
எஞ்சிய ஆட்டத்தை சிட்டி வெறும் பத்து ஆட்டக்காரர்களுடன் விளையாடியது. இருப்பினும், மனந்தளராது விளையாடிய சிட்டி இரண்டு கோல்களைப் போட்டு முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் சிட்டிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ரஹீம் ஸ்டெர்லிங் பெனால்டியை எடுக்க, பந்தை தட்டிவிட்டார் உல்வ்சின் கோல்காப்பாளர்.
ஆனால் பெனால்டி எடுக்கப்பட்டபோது உல்வ்ஸ் ஆட்டக்காரர்கள் தப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி சிட்டிக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கினார்.
இம்முறையும் ரஹீம் ஸ்டெர்லிங் பெனால்டியை எடுத்தார். அவர் அனுப்பிய பந்தை உல்வ்ஸ் கோல்காப்பாளர் மீண்டும் தட்டிவிட்டார்.
ஆனால் இம்முறை ஸ்டெர்லிங்கிற்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. கோல்காப்பாளர் தட்டிவிட்ட பந்து அவரிடமே சென்றது. மூன்றாவது முறையாகக் கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பந்தை வலைக்குள் சேர்த்தார் ஸ்டெர்லிங்.
ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் சிட்டியின் இரண்டாவது கோலை ஸ்டெர்லிங் போட்டார்.
ஆனால் 55வது நிமிடத்திலிருந்து சிட்டியின் சரிவு தொடங்கியது. உல்வ்ஸ் குழுவின் ஏடம் டிரோரே தூரத்திலிருந்து அனுப்பிய பந்து மின்னல் வேகத்தில் வலையைத் தொட்டது.
82வது நிமிடத்தில் ராவுல் ஜிமினேஸ் உல்வ்ஸ் குழுவின் இரண்டாவது கோலைப் போட்டு ஆட்டத்தைச் சமன்செய்தார்.
பரவாயில்லை, ஒரு புள்ளியாவது கிடைக்கும் என்றிருந்த சிட்டிக்கு ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் பேரிடி விழுந்தது.
சிட்டியின் தற்காப்பு ஆட்டக்காரரைக் கடந்து சென்ற மேட் டோஹர்டி பந்தை வலைக்குள் அனுப்பி உல்வ்ஸ் குழுவின் வெற்றியை உறுதி செய்ததார்.