மெல்பர்ன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டை ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது. மெல்பர்னில் நடைபெற்ற இந்த ‘பாக்சிங் டே’ டெஸ்ட்டில் நியூசிலாந்து பூவா தலையாவில் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
டிராவிஸ் ஹெட் 114 ஓட்டங்களிலும் ஸ்டீவ் ஸமித் 85 ஓட்டங்களிலும் டிம் பெய்ன் 79 ஓட்டங்களிலும் மார்னஸ் லாபஸ்சாக்னே 63 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 155.1 ஓவர்களில் 467 ஓட்டங்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளையும் கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டு களையும் வீழ்த்தினர்.
அதன்பின், நியூசிலாந்து முதல் இன்னிங்சைத் தொடங்கியது. ஆஸ்திரேலிய வீரர்கள் அபாரமாக பந்து வீச, நியூசிலாந்து 148 ஓட்டங்களில் சுருண்டது. டாம் லேதம் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் பாட்டின்சன் 3 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
319 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளுக்கு 137 ஓட்டங்கள் எடுத்தது. இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் நேற்று காலை தொடங்கியது. ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளுக்கு 168 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை ‘டிக்ளேர்’ செய்வதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, 488 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் பிளெண்டல் இறுதிவரை தாக்குப் பிடித்தார். ஆனால் அவரது சதம் பயனளிக்கவில்லை. அவர் 121 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்தனர்.
இறுதியில், நியூசிலாந்து அணி 71 ஓவர்களில் 240 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 247 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியான் 4 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் பாட்டின்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா. இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி அடுத்த மாதம் 3ஆம் தேதி நடைபெறுகிறது.