பர்ன்லி: நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பர்ன்லியை 2-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியதை அடுத்து, இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் மான்செஸ்டர் யுனைடெட் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் அண்டனி மார்ஷல் கோல் போட்டு யுனைடெட்டை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
யுனைடெட்டின் மத்தியத் திடல் ஆட்டக்காரர்கள் பால் போக்பாவும் ஸ்காட் மொக்டொமினேவும் களமிறங்காதபோதிலும் அக்குழு சிரமத்தை எதிர்நோக்கவில்லை.
பிற்பாதி ஆட்டத்தில் பர்ன்லி கோல் போட முயன்றது. ஆனால் யுனைடெட்டின் தற்காப்பு இறுதி வரை பிடிவாதமாக நின்றது.
இந்நிலையில், ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டும் எஞ்சிஇருந்தபோது யுனைடெட்டின் இரண்டாவது கோலை மார்கஸ் ரேஷ்ஃபர்ட் போட்டார்.
பர்ன்லி கோல்காப்பாளர் நிக் போப்பைக் கடந்து சென்ற ரேஷ்ஃபர்ட், பந்தை வலைக்குள் சேர்த்தார்.
“மார்ஷல் மிகச் சிறப்பாக விளையாடினார். கோல் போடுவதைவிட தாக்குதல் ஆட்டக்காரர்
களுக்கு வேறு எதுவும் முக்கியமல்ல. மார்ஷலின் இந்தத் தன்னம்பிக்கை இப்பருவம் முடியும் வரை இருக்க வேண்டும் என நான் வேண்டிக்கொள்கிறேன்,” என்றார் ரேஷ்ஃபர்ட்.
மற்றோர் ஆட்டத்தில் நியூகாசலை 2-1 எனும் கோல் கணக்கில் செல்சி தோற்கடித்தது.
அஸ்டன் வில்லாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் வாட்ஃபர்ட் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் வாட்ஃபர்ட்டின் ஏட்ரியன் மாரியப்பாவுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது. இதனால் வாட்ஃபர்ட் எஞ்சிய ஆட்டத்தை வெறும் பத்து பேருடன் விளையாடியது. இருப்பினும் அது அபார வெற்றி பெற்றது.
மற்றோர் ஆட்டத்தில் நார்விச் சிட்டியும் ஸ்பர்சும் தரப்புக்கு இரண்டு கோல்கள் போட்டு சமநிலை கண்டன.
லெஸ்டர் சிட்டி 2-1 எனும் கோல் கணக்கில் வெஸ்ட் ஹேமை வீழ்த்தியது.