மான்செஸ்டர்: லிவர்பூலுக்கும் தனக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும். பட்டியலில் முன்னேற முடியாவிட்டாலும் இதனினும் கீழே போய்விடக்கூடாது. தற்போதைய நிலையில் இதுவே மான்செஸ்டர் சிட்டியின் குறிக்கோள்.
அதன் இந்த நோக்கம் நேற்று அதிகாலை ஷெஃபீல்டு யுனைடெட்டுனான போட்டியில் வெற்றி பெற்றதால் நிறைவேறியது. மற்றபடி, ஆட்டத்தில் விறுவிறுப்பு இருந்ததா என்றால் இல்லை என்றே பல காற்பந்து விமர்சகர்கள் கூறுவர்.
நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் மான்செஸ்டர் சிட்டி சோபிக்கவில்லை. முந்தைய ஆட்டத்தில் உல்வ்ஸ் அணியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்ற சோகம் இைழயோடியதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.
பின்னர் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், 52ஆம் நிமிடத்தில் செர்ஜியோ அகுவேரோ சிட்டியின் முதல் கோலைப் போட்டு முன்னிலை பெற்றுத் தந்தாலும், அதிலும் ஒரு குறை.
ஷெஃபீல்டு யுனைடெட் வீரரான ஜான் ஃபிளெக் என்பவர் பந்தை எதிர்கொண்டபோது நடுவர் குறுக்கே வந்ததால் அவரால் பந்தை சரிவர உதைக்க முடியாமல் போனது என்றும் அதன் விளைவாக சிட்டியின் கெவின் டி பிரய்ன பந்தை செர்ஜியோ அகுவேரோ கோல் போட்டார் என்று ஷெஃபீல்டு யுனைடெட் நிர்வாகி கிரிஸ் வைல்டர் புலம்புவதாக பிபிசி செய்தி கூறுகிறது.
பின்னர் கெவின் டி பிரய்ன ஆட்டத்தின் 82ஆம் நிமிடத்தில் தானும் ஒரு கோல் போட சிட்டி 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி வாகை சூடியது.
நடுவர் குறுக்கே வந்த சம்பவம் குறித்து பேசிய கிரிஸ் வைல்டர், “நடுவரை நான் ஆட்டம் முடிந்து காணச் சென்றேன். அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
“அந்தச் சம்பவம் கண நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. இதில் அவருடைய துணை நடுவர்கள் உதவியிருக்கலாம் என்று தோன்றியது.
“நடுவர் பந்தைக் கையாடினால் அவர் உடனே ஆட்டத்தை நிறுத்திவிட வேண்டும் என்ற விதிமுறை நம் அனைவருக்கும் தெரியும்.
“அதுபோல், அவர் ஆட்டக்காரருக்கு நடுவில் வந்து பந்தை அந்த வீரர் சரிவர விளையாட முடியாமல் போனால் நியாயமான முடிவை எடுக்க வேண்டாமா,” எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த வெற்றியைத் ெதாடர்ந்து சிட்டி லிவர்பூலுடனான இடைவெளியை 14 புள்ளிகளுக்கு குறைத்துள்ளது. மற்றோர் ஆட்டத்தில் முதலில் கோல் போட்ட ஆர்சனல் பின்னர் செல்சியை இரண்டு கோல்கள் போடவிட்டு 1-2 என தோல்வியைத் தழுவியது.
இதில் செல்சியின் ஜோர்கின்யோ என்ற வீரர் ஏற்கெனவே மஞ்சள் அட்டை பெற்ற நிலையில் இரண்டாம் முறையும் தப்பாட்டத்தில் ஈடுபட அவருக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டாமல் நடுவர் விட்டுவிட்டார்.
அவரே செல்சியின் இரண்டாவது கோல் போட ஆர்சனல் அணிக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே விமர்சகர்கள் கூறுகின்றனர். வேறோர் ஆட்டத்தில் லிவர்பூல் உல்வ்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு மூன்று புள்ளிகளையும் தட்டிச் சென்றது.