லண்டன்: ஞாயிறன்று நடைபெற்ற காற்பந்துப் போட்டிகளில் செல்சியுடன் மோதிய ஆர்சனலின் வேகத்தைப் பார்த்தோர் மான்செஸ்டர் யுனைடெட்டை நினைத்து நிச்சயம் கவலையடைந்திருப்பர். அதற்குக் காரணம் ஆர்சனலை அடுத்து எதிர்த்து விளையாடப்போவது யுனைடெட் என்பதால்.
மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் பயந்தது போலவே நேற்று அதிகாலை ஆர்சனலுக்கும் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் யுனைடெட் திக்குமுக்காடியது.
ஆர்சனல் சர்வ சாதாரணமாக பந்தைத் தட்டிச் சென்ற விதம் யுனைடெட் வீரர்களை நிலைகுலைய வைத்தது. மத்திய திடலில் ஸ்காட் மெக்டாமினி, பால் போக்பா போன்ற வீரர்கள் இல்லாதது யுனைடெட்டால் ஆர்சனலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது.
இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஆர்சனல் முதல் பாதி ஆட்டத்தின் 8ஆம் நிமிடத்தில் பெப்பே என்ற வீரர் மூலம் முதல் கோலைப் போட்டது. பின்னர், முதல் பாதி ஆட்டம் முடியும் முன்னரே 42ஆம் நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பின் மூலம் ஆர்சனலின் சாக்ரடிஸ் என்ற வீரர் தமது அணியின் இரண்டாவது கோலைப் போட்டு ஆர்சனல் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற உதவினார்.
கடந்த ஒன்பது ஆட்டங்களில் ஒரு முறை மட்டுமே தோல்வியைத் தழுவிய யுனைடெட், இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் வேகத்தைக் கூட்டியது. ஆனால், அதன் வீரர்களால் ஆர்சனல் கோல்காப்பாளருக்கு எவ்விதப் பிரச்சினையும் ஏற்படவில்லை.
யுனைடெட்டின் மத்திய திடல் வீரர்களான லிங்கார்ட், மெட்டிச் ஆகியோரால் ஆர்சனலின் மெசுட் ஒசில், டெரேரா, ஸாக்கா ஆகியோரின் வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறினர்.
நேற்றைய ஆட்டம் யுனைடெட் அணியால் சீரான வெற்றிப் பாதையில் செல்ல முடியாததை பிரதிபலிப்பதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. அந்த அணியினரால் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற முடியாதது ஒரு பெரிய குறை என்று கூறப்படுகிறது.
ஆர்சனலின் நிர்வாகியாக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட அர்டேட்டாவுக்கு இது முதல் வெற்றி.
ஹெர்தா பெர்லின் அணிக்கு செல்லக் காத்திருப்பதாகக் கூறப்படும் கிரானிட் சாக்கா என்ற வீரரும் டொரேரா என்ற சுவிட்சர்லாந்து வீரரும் மத்திய திடல் பகுதியில் யுைனடெட் வீரர்களை காட்டிலும் முனைப்புடன் செயல்பட்டு அணியின் வெற்றிக்கு பேருதவி புரிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மான்செஸ்டர் யுனைடெட்டின் ஃபிரட், மேசன் கிரீன்வுட் போன்றோர் எவ்வளவோ முயன்றும் அவர்களால் ஆர்சனலின் தற்காப்பு அரணை தகர்க்க முடியவில்லை. யுனைடெட்டின் இந்த மத்திய திடல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் பிரிமியர் லீக்கில் அதனால் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்று காற்பந்து விமர்சகர்கள் கருத்துரைக்கின்றனர்.
மற்றோர் ஆட்டத்தில் செளத்ஹேம்டன் குழுவுடன் மோதிய மொரின்யோவின் ஸ்பர்ஸ் குழு, 0-1 எனத் தோல்வியைத் தழுவியது.
அதில் கோல் போட்ட டேனி இங்ஸ் என்ற செளத்ஹேம்டன் வீரர் பந்தை ஸ்பர்ஸ் வீரரின் தலைக்கு மேல் பந்தை உதைத்து பின்னர் அவரைத் தாண்டிச் சென்று பந்தை உதைத்து அற்புதமாக கோல் போட்டார் என்று பிபிசி செய்தி கூறுகிறது.