லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் முன்னணிக் குழுவாக விளங்கும் லிவர்பூல் கடந்த ஓராண்டாக எந்தப் போட்டியிலும் தோற்றதில்லை. இந்த நிலை நேற்று அதிகாலை ஷெஃபீல்டு யுனைடெட் குழுவைச் சந்தித்தபோதும் தொடர்ந்தது.
ஷெஃபீல்டு யுனைடெட்டுக்கு எதிராக நான்காம் நிமிடத்தில் லிவர்பூல் வீரர் முகம்மது சாலா கோலடித்தார். அது, ஷெஃபீல்டு யுனைடெட் வீரர் பால்டோக் என்பவர் பந்தைத் தவறவிட்டதால் அதிர்ஷ்டத்தில் வந்தது என்றாலும் ஆட்டத்தின் 64ஆம் நிமிடத்தில் சாடியோ மானே போட்ட கோலில் அதிர்ஷ்டத்துக்கு இடமில்லை என்று கூறுகிறது பிபிசி செய்தித் தகவல்.
இதைத் தொடர்ந்து லிவர்பூல் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற, ஷெஃபீல்டு யுனைடெட்டையும் தோல்வியடைந்த குழுக்களின் பட்டியலில் சேர்த்தது.
நேற்றைய ஆட்டத்தையும் சேர்த்து, லிவர்பூல் கடந்த ஓராண்டில் மட்டும் 37 ஆட்டங்களில் விளையாடிய நிலையில், 89 கோல்கள் போட்டு தரவரிசைப் பட்டியலில் 101 புள்ளிகளைப் ெபற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காற்பந்துப் பருவத்தில், குறிப்பாக இந்த விழாக்கால காற்பந்துப் போட்டி பட்டியலை ஒரு குற்றம் என்றே வர்ணித்த லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப், நேற்றைய ஆட்டத்தில் களமிறக்கிய வீரர்களில் பெரிய மாற்றம் ஏதும்இல்லை. காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் நாபி கெய்ட்டா என்ற வீரருக்கு பதில் ஜேம்ஸ் மில்னர் என்பவரை அவர் களமிறக்கினார்.
லிவர்பூல் அணியின் இந்த சாதனை குறித்து கருத்துரைத்த கிளோப், “ஓராண்டாக தோல்வி அடையாமல் இருந்தது மகிழ்ச்சியைத் தருகிறது.
“ஆனால், எங்களது இலக்கு அதுவல்ல. மாறாக, ஆட்டத்தில் வெற்றி பெறுவதே எங்களது நோக்கமாக இருந்தது. நாங்கள் எதிரணியின் உத்திகளுக்கு ஈடுகொடுத்து விளையாடி, அந்த அணியின் தற்காப்பு அரணைத் தகர்த்து எதிர்த் தாக்குதல் நடத்தினோம். எல்லாமே எண்ணப்படி நடந்தது. எங்கள் வீரர்கள் அபாரத் திறனை வெளிப்படுத்தினர். நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது விளையாட்டாளர்களை நிைனத்தால் பெருமையாக உள்ளது. ஆனால், இது இப்படியே நீடிக்கும் என அசட்டையாக இருந்துவிடக்கூடாது. ஷெஃபீல்டு யுனைடெட்டை நாங்கள் கட்டுப்படுத்திய விதம் இதுவரை காணாதது.
“பந்து எங்கள் வசம் இருந்தபோது நாங்கள் அபாரமாக ஆடினோம். எங்கள் வீரர்கள் அமைதி யாக விளையாடினாலும் விறுவிறுப்பாக விளையாடினர். நாங்கள் போட்ட கோல்கள் அற்புதமானவை,” என்று அவர் புகழாரம் சூட்டினார்.