கௌகாத்தி: டெஸ்ட் போட்டிகளுக்கான நாட்களைப் படிப்படியாக குறைத்துக்கொண்டே போனால், ஒருகட்டத்தில் டெஸ்ட் போட்டியே காணாமல் போய்விடும் என்று இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.
டெஸ்ட் போட்டிக்கு மக்களிடையே வரவேற்பு குறைந்து வருவதாக நினைக்கும் ஐசிசி எனப்படும் அனைத்துலக கிரிக்கெட் மன்றம், பகலிரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்தியது.
இந்த சூழலில் டெஸ்ட் போட்டி நடத்தப்படும் நாட்களையே குறைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. தற்போது 5 நாட்களாக நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக நடத்தலாம் என்று ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது.
ஐசிசியின் இந்தத் திட்டத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆதரவு அளித்தாலும் அந்நாட்டு அணி வீரர்களே இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
முட்டாள்தனமானது என்றும் பாரம்பரியத்தை மாற்றக்கூடாது என்றும் நேதன் லயன் உள்ளிட்ட மூத்த வீரர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், நேற்று நடை பெறவிருந்த இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கோஹ்லியிடம், டெஸ்ட் போட்டி விளையாடும் நாட்களை 4 நாட்களாகக் குறைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், "என்னைப் பொறுத்தவரைக்கும் டெஸ்ட் போட்டி நடத்தப்படும் நாட்களை மாற்றக்கூடாது. டெஸ்ட் போட்டிகளை பிங்க் பந்தில், பகலிரவுப் போட்டியாக நடத்துவதே டெஸ்ட் போட்டியை வர்த்தக ரீதியாக நகர்த்துவதாகவும் பொழுதுபோக்கு அம்சத்தைக் கூட்டுவதாகவும் நான் நினைக்கிறேன்.
"பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கலாம். ஆனால் பாரம்பரிய டெஸ்ட் போட்டியைப் பாழ்படுத்துதல் கூடாது. ஆதலால், எனக்கு 4 நாட்கள் டெஸ்ட் போட்டியில் நம்பிக்கை இல்லை.
"இப்படியே சென்றால், 4 நாட்கள் டெஸ்ட் போட்டியை சில ஆண்டுகள் கழித்து, 3 நாட்கள் டெஸ்ட் போட்டி நடத்தலாம் என்று ஆலோசனை தோன்றும். ஒருநாள் டெஸ்ட் போட்டியே காணாமல் போய்விடும்.
"இதுபோன்ற ஆலோசனைகளை நான் ஆதரிக்கவும் மாட்டேன், வரவேற்கவும் மாட்டேன். பாரம்பரிய டெஸ்ட் போட்டிக்கு இந்த ஆலோசனை சரியானது இல்லை. 5 நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிதான் உயர்ந்தது," என்றார்.