கௌஹாத்தி: இந்தியாவின் கௌஹாத்தி கிரிக்கெட் மைதானத்தில் இருந்த ஈரப்பதத்தைப் போக்க சில வீட்டு உபயோகப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவுக்குப் பயணம் சென்றுள்ள லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
முதல் ஆட்டம் கௌஹாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு தொடங்க
விருந்தது.
முதலில் பூவா, தலையா வென்ற இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஷிகர் தவான் ஆகியோரின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தார்கள்.
ஆனால், போட்டி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்தது. எனவே, ஒரு மணி நேரத்துக்குபின் மீண்டும் ஆட்டம் தொடங்க வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஆடுகளத்துக்குள் ஈரப்பதம் கூடிவி்ட்டது.
ஆடுகளத்தின் ஈரப்பதத்தைக் குறைத்து போட்டியை நடத்திவிடலாம் என்று கள பராமரிப்பாளர்கள் பலவாறு முயன்றார்கள்.
ஹேர் டிரையர், வேக்கம் க்ளீனர், அயர்ன் பாக்ஸ் போன்ற சில வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டு ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதத்தைப் போக்க முயற்சித்தனர். 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்திவிடலாம் என்று அசாம் கிரிக்கெட் நிர்வாகிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் கடைசியாக 9.45 மணிக்கு களத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டியை நடத்த தகுதியானதாக இல்லை என அறிவித்ததால், ஒருபந்துகூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.
முன்னாள் இந்திய வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “அனைத்துலகப் போட்டிக்கு இதுபோன்று மோசமாகவா ஆடுகளத்தைப் பராமரிப்பார்கள். ஓட்டையான பிளாஸ்டிக் பாய்கள் மூலம் மழைநீர் ஆடுகளத்தில் இறங்கிவிட்டது. மைதானத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது,” என வேதனை தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், ஆடுகளத்தை ஹேர் ட்ரையர், அயன் பாக்ஸ் கொண்டு காய வைத்ததை டுவிட்டரில் கடுமையாக கிண்டல் செய்து விமர்சித்தனர்.
மேலும் போட்டியை ஏன் இரவு 7 மணிக்கு நடத்த வேண்டும் அதற்குப் பதிலாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போல 4 மணிக்கு போட்டியை நடத்தினால் என்ன என ரசிகர்கள் கேள்வி
எழுப்பினர்.
இரு அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டி இந்தூரில் இன்று நடைபெறவுள்ளது.