லெஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் தற்சமயம் இரண்டாமிடத்தில் இருக்கும் லெஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு, லீக் கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமெனில் கடுமையாகப் போராட வேண்டி இருக்கும் என்று அதன் நிர்வாகி பிரண்டன் ரோஜர்ஸ் எச்சரித்து இருக்கிறார்.
சொந்த கிங் பவர் விளையாட்டரங்கில் நேற்று அதிகாலை அரையிறுதி முதல் சுற்று ஆட்டத்தில் லெஸ்டர் 1-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லாவுடன் சமன் கண்டது.
ஃபிரடெரிக் கில்பர்ட் அடித்த கோலால் முதல் பாதியிலேயே ஆஸ்டன் வில்லா முன்னிலைக்குச் சென்றது. ஆனாலும், பிற்பாதியில் லெஸ்டர் சிட்டியின் மாற்று ஆட்டக் காரராகக் களமிறங்கிய கெலச்சி இகெனாச்சோ பதில் கோலடித்து, ஆஸ்டன் வில்லாவின் வெற்றியைத் தடுத்தார்.
இந்தப் பருவத்தில் இதுவரை எட்டு ஆட்டங்களில் விளையாடி இருக்கும் இகெனாச்சோ அடித்த ஆறாவது கோல் இது.
லிவர்பூலுக்கு அடுத்ததாக இந்தப் பருவத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் குழுவாகத் திகழும் லெஸ்டர், இந்த ஆட்டத்திலும் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத முடிவு கிட்டியதால் இம்மாதம் 28ஆம் தேதி நிகழும் அரையிறுதி இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அக்குழு வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
“ஒட்டுமொத்தத்தில், இந்த ஆட்டத்தில் எங்களது கையே ஓங்கி இருந்ததாக நினைக்கிறேன். ஆஸ்டன் வில்லா சிறப்பாகத் தற்காத்தது. அதேபோல, அக்குழுவின் கோல்காப்பாளரும் எங்களின் பல கோல் முயற்சிகளைத் தடுத்துவிட்டார். இரண்டு ஆட்டங்கள் கொண்ட சுற்று எப்போதுமே கடினமானதாகத்தான் இருக்கும். இறுதிப் போட்டிக்குள் நுழைய வேண்டுமெனில், அடுத்த ஆட்டத்தில் உயிரைக்கொடுத்து ஆடவேண்டும். ஆயினும், எங்களது வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்,” என்றார் ரோஜர்ஸ்.
இரண்டாவது அரையிறுதியில் வெல்லும் குழு, இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அல்லது மான்செஸ்டர் சிட்டி குழுவை எதிர்த்தாடும்.