மான்செஸ்டர்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் (படம்) மீது இனவாத தூற்றுதலில் ஈடுபட்ட அக்குழுவின் இரு ரசிகர்களுக்கு காற்பந்து ஆட்டங்களை அரங்கில் பார்க்க ஐந்து ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு, மேன்சிட்டியின் எட்டிஹாட் அரங்கில் காற்பந்து ஆட்டங்களை பார்க்க அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு டிசம்பரில் எட்டிஹாட் அரங்கில் போர்ன்மத் குழுவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கோல் போட்ட ஸ்டெர்லிங், கொண்டாட்ட உணர்வில் திளைத்தார். அப்போது அரங்கில் அமர்ந்திருந்த ஐயன் பால்ட்ரி என்பவர் ஸ்டெர்லிங்கை இனவாத ரீதியாகத் தூற்றினார்.
மற்றவரின் மனதை வேண்டுமென்றே புண்படுத்தும் விதமாக இனவாத தூற்றுதலில் தாம் ஈடுபட்டதாக கடந்த செப்டம்
பரில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மான்செஸ்டர் நீதிமன்றத்தில் அவருக்கு நேற்று முன்தினம் தண்டனை விதிக்கப்பட்டது. காற்பந்து ஆட்டங்களைப் பார்க்க தடை விதிக்கப்பட்டதுடன் 200 மணி நேர சமூக சேவையைப் புரியவும் நீதிமன்ற செலவாக 170 பவுண்ட் (S$300) செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
இதே ஆட்டத்தில் ஆட்ட நடுவர்கள் இருவர் மீது இனவாத தூற்றுதல் புரிந்த ஐயனின் நண்பர் ஜேம்ஸ் மெக்கொனலுக்கு மான்செஸ்டரில் தண்டனை விதிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்தபோது மெக்கொனல் குடிபோதையில் இருந்ததாகவும் திடலில் இருந்த ஆட்டக்காரர்களைத் தகாத வார்த்தைகளால் அவர் திட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.