புதுடெல்லி: விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைக்கு லாரஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. ‘விளையாட்டின் சிறந்த தருணங்கள்’ என்ற அடிப்படையில் இவ்விருதுக்கான போட்டியில் வீரர்கள் சேர்க்கப்படுவர். அந்த வகையில் 2019ஆம் ஆண்டின் சிறந்த வீரர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதற்கான விருது வரும் பிப்ரவரி 17ஆம் தேதி ஜெர்மனியின் பெர்லின் நகரில் வழங்கப்பட உள்ளது.
விருதுக்கு தேர்வு செய்யப்பட வேண்டிய 20 பேர் அடங்கிய பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவானாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரின் பெயரும் உள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கிண்ணத்தை வென்றது. வெற்றி பெற்றதும் சச்சினை சக அணி வீரர்கள் தோளில் சுமந்தவாறு திடலை வலம் வந்தனர். அப்போது அந்தத் திடலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரம் செய்து சச்சினுக்கும் இந்திய அணிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சச்சினை வீரர்கள் தோளில் சுமந்து வந்த தருணம்தான் அவருக்கான லாரஸ் விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளது.
இதனை ‘தேசத்தை தோளில் சுமப்பது’ என தலைப்பிட்டுள்ளது லாரஸ் அமைப்பு. இந்த விருதுக்கான வாக்கெடுப்பு இணையத்தில் தொடங்கி உள்ளது. பிப்ரவரி 16ஆம் தேதி வரை ரசிகர்கள் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வாக்குகள் பெறுபவர் லாரஸ் விருதைப் பெறுவார்.