லண்டன்: செல்சி காற்பந்துக் குழுவின் மத்திய திடல் ஆட்டக்காரர் ராஸ் பார்க்லி, அக்குழுவிலிருந்து வெளியேற மாட்டார் என செல்சி நிர்வாகி ஃபிராங்க் லாம்பார்ட் கூறி உள்ளார்.
பார்க்லியை இரவல் வாங்குவதற்கு வெஸ்ட் ஹேம் குழு ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், லாம்பார்ட் இவ்வாறு கருத்து கூறினார்.
இதற்கு முன்னதாக எவர்ட்டன் குழுவிற்காக பார்க்லி விளையாடியபோது அக்குழுவின் நிர்வாகியாக டேவிட் மோயஸ் பொறுப்பு வகித்திருந்தார்.
தற்போது வெஸ்ட் ஹேம் நிர்வாகியாக மோயஸ் உள்ளார்.
அவர்கள் எவர்ட்டனில் இருந்தபோது இருவருக்கும் இடையே நல்ல பங்காளித்துவத்தை ஒத்த நட்புமுறை நிலவியது. அண்மைகாலமாக 26 வயது பார்க்லியின் ஆட்டத்திறன் மேம்பட்டுவரும் நிலையில், செல்சியில் அவரைத் தக்கவைத்துக்கொள்ள லாம்பார்ட் முயற்சி எடுத்து வருகிறார்.
நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தின் தொடக்கத்தில், கேளிக்கை விடுதி ஒன்றுக்கு வெளியே டாக்சி ஓட்டுநர் ஒருவருடன் சச்சரவில் ஈடுபட்ட பார்க்லியின் நடத்தை சரியில்லை என லாம்பார்ட் குறைகூறியிருந்தார்.