ஹோபார்ட்: அனைத்துலக டென்னிஸ் போட்டி ஒன்றில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-நாடியா கிச்செனோக் இணை வெற்றியாளர் பட்டத்தை வென்றுள்ளனது.
ஹோபார்ட் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, உக்ரேனிய வீராங்கனை நாடியா கிச்செனோக் இணை, சீனாவை சேர்ந்த ஸாங் ஷுவெய், பெங் ஷுவெய் இணையை எதிர்கொண்டனர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சானியா-நாடியா இணை, எதிரணிக்கு வாய்ப்புகளைக் கொடுக்காமல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியாக, சானியா-நாடியா இணை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சீன வீராங்கனைகளை வீழ்த்தி வெற்றியாளர் பட்டத்தை வென்றது. காயம் மற்றும் குழந்தை பெற்றது காரணமாக ஈராண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் களம் கண்ட சானியா, மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார்.