போர்ட் எலிசபெத்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மளமளவென விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா ஃபாலோ-ஆன் விளையாட நேர்ந்தது.
பூவா, தலையா வென்று முதலில் பந்தடித்த இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 499 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
பென் ஸ்டோக்ஸ் 120 ஓட்டங்களையும் ஒல்லி போப் ஆட்டமிழக்காமல் 135 ஓட்டங்களையும் எடுத்து அணிக்கு வலுச்சேர்த்தனர்.
தென்னாபிரிக்கா அணி சார்பில் மகாராஜ் 5 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் விளையாட தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி மூன்றாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ஓட்டங்களை எடுத்திருந்தது.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், 28 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளையும் இழந்து ஒரேயொரு ஓட்டம் மட்டுமே எடுத்தது.
209 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி, ஃபாலோ-ஆன் பெற்று தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சையும் நேற்று விளையாடியது. சிங்கப்பூர் நேரம் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, தென்னாப்பிரிக்கா 15 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தாமதமானது.