3வது ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா

3வது ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா

2 mins read
57d7c390-b885-4044-8afb-57f0aacdee88
287 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். படம்: ஏஎப்பி -

பெங்களூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. பெங்களூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலியா பந்தடிப்பைத் தேர்வு செய்தது.

ஸ்டீவன் ஸ்மித் நிலைத்து நின்று 131 ஓட்டங்களும் மார்னஸ் லபுஷேன் 54 ஓட்டங்களும் சேர்த்தனர்.

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகம்மது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

287 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 69ஆக இருந்தபோது கே.எல்.ராகுல் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து அணித் தலைவர் விராத் கோஹ்லி களமிறங்கினார். இந்தத் தருணமே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

ஒருபக்கம் கோஹ்லி நிலைத்து நின்று ஆட, மறுமுனையில் ரோகித் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் 119 ஓட்டங்களும் கோஹ்லி 89 ஓட்டங்களும் எடுத்ததால் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

களக்காப்பின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் ஷிகர் தவான் தொடக்க வரிசை பந்தடிப்பாளராக களமிறங்கவில்லை.

இந்திய அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

ஷ்ரேயாஸ் ஐயர் 44 ஓட்டங்களுடனும் மணீஷ் பாண்டே 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.