ஆக்லாந்து: அதே அணிகள், அதே ஆடுகளம், ஆட்டத்தின் முடிவும் அதேதான்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 204 ஓட்டங்கள் என்ற மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்தபோதும் ஆறு பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது.
இந்நிலையில், அவ்விரு அணிகளும் எந்த மாற்றத்தையும் செய்யாமல், முதல் போட்டி நடந்த ஆக்லாந்து ஆடுகளத்திலேயே நேற்று மீண்டும் மோதின.
பூவா தலையாவில் வென்ற இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி முதலில் எதிரணியைப் பந்தடிக்க அழைத்தார்.
இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்டிலும் கொலின் மன்ரோவும் களமிறங்கினர். ஷர்துல் தாக்குர் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு சிக்சர்களை விளாசி அசத்தினார் கப்டில். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 48 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
ஷர்துல், சகல் ஆகிய இருவரைத் தவிர மற்ற இந்தியப் பந்துவீச்சாளர்கள் அனைவரும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி, எதிரணியின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தினர். இதனால், 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை மட்டும் இழந்தபோதும் நியூசிலாந்து அணியால் 132 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
எளிய இலக்கு என்றபோதும் ரோகித் சர்மா (8), கோஹ்லி (11) என தொடக்கத்திலேயே இருவரை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆயினும், முதல் போட்டியைப் போலவே இம்முறையும் லோகேஷ் ராகுலும் ஷ்ரேயாஸ் ஐயரும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தனர்.
ஷ்ரேயாஸ் 33 பந்துகளில் 44 ஓட்டங்களை விளாசினார். முதல் போட்டியைப் போலவே இம்முறையும் அரை சதம் கடந்தார் ராகுல் (57*). இறுதியில் 15 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்திய அணி வெற்றியைச் சுவைத்தது.
மூன்றாவது போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.