மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் முன்னணி காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி வீட்டிற்குள் மேன்யூ ரசிகர்கள் தீப்பந்தங்களை கொளுத்தி வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இபிஎல் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலைவிட 33 புள்ளிகள் குறைவாகப் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது மேன்யூ.
மேன்யூவின் இந்த பின்னடைவுக்கு அதன் தலைமை நிர்வாக அதிகாரி வுட்வர்ட்டின் முதலீட்டு பற்றாக்குறைதான் காரணம் என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை இரவு மேன்யூ உரிமையாளர் வுட்வர்ட்டின் வீட்டிற்கு வெளியே கூடிய ரசிகர்கள், அவருக்கு எதிராக முழக்கமிடும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஆனால் அப்போது வுட்வர்ட்டோ, அவரது குடும்பமோ அவ்விடத்தில் இல்லை என்று பிரிட்டிஷ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் இச்செயலை கண்டித்துள்ள மேன்யூ, "இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்களை அடையாளம் காணும் பணியில் கிரேட்டர் மான்செஸ்டர் போலிசார் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளி என்று கண்டறியப்படுபவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும்.
"ரசிகர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம். ஆனால் சேதம் விளைவிப்பதோ, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது என்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

