டர்பன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான இறுதிக்கட்டத்தில் இரு ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி ஓர் ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நேற்று நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணிக்காக முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் பொறுப்புடன் ஆடி 40 ஓட்டங்களில் வெளியேறினார். மொயின் அலி 39 ஓட்டங்களிலும் பேர்ஸ்டோவ் 35 ஓட்டங்களிலும் இயான் மார்கன் 27 ஓட்டங்களிலும் வெளியேறினர். பென் ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்களை எடுத்தது.
இதைத்தொடர்ந்து, 205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் அதிரடியாக ஆடினார். அவர் 22 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரி என 65 ஓட்டங்களைக் குவித்து அவர் ஆட்டமிழந்தார். பவுமா 31 ஓட்டங்களிலும் பிரெடோரியஸ் 25 ஓட்டங்களிலும் மில்லர் 21 ஓட்டங்களிலும் வெளியேறினார்.
வான் டெர் டுசென் தாக்குப்பிடித்து ஆடினார். அவர் இறுதிவரை போராடி 43 ஓட்டங்களை எடுத்து களத்தில் இருந்தார்.
இறுதி ஓவரில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 4 பந்தில் எஞ்சிய நிலையில், அந்த அணி 12 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. கடைசி 2 பந்துகளில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், 2 ஓட்ட வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் டி20 தொடரின் முதல் போட்டியில் ஓர் ஓட்ட வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து, இந்தப் போட்டியில் 2 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.