லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் நியூகாசலை 4-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் நேற்று பந்தாடியது.
ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஆர்சனல் தாக்குதலில் இறங்கியது. ஆனால் நியூகாசலின் தற்காப்பு பிடிவாதம் பிடிக்க, இடைவேளையின்போது இருகுழுக்களும் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தன. பிற்பாதி ஆட்டத்தில் நிலைமை முற்றிலும் மாறியது. ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் ஒபமயாங் தலையால் முட்டிய பந்தை வலையைத் தொட்டது.
ஆர்சனலின் இந்த முதல் கோல் நியூகாசலை வெகுவாகப் பாதித்தது. அதனைத் தொடர்ந்து, தாக்கு தலைத் தீவிரப்படுத்திய ஆர்சனல் மூன்று கோல்களைப் போட்டது. நிக்கலஸ் பெப்பே, மெசுட் ஒசில், அலெக்சாண்ட்ரே லக்கசேட் ஆகியோர் ஆர்சனலின் ஏனைய கோல்களைப் போட்டனர்.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சனல் லீக் பட்டியலில் பத்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இது நிர்வாகி மிக்கேல் ஆர்டேட்டாவின் தலைமையின்கீழ் ஆர்சனல் பதிவு செய்துள்ள இரண்டாவது வெற்றியாகும்.
லீக் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஸ்பர்சைவிட ஆர்சனல் ஆறு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.
சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் ஆகிய போட்டிகளில் பங்கேற்க மான்செஸ்டர் சிட்டிக்கு ஈராண்டு தடை விதிக்கப்பட்டிருப்பதால் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும் குழு சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெறும்.
இதற்கிடையே, நியூகாசலின் ஏமாற்றமிக்க லீக் பயணம் தொடர்வதால் குழுவின் நிர்வாகத்துக்கு எதிராக அதன் ரசிகர்
களின் அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.