செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் செஞ்சூரியனில் நடைபெற்றது.
பூவா தலையாவில் வென்ற தென்னாப்பிரிக்கா பந்தடிப்பைத் தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்க அணியின் பவுமா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தென்னாப்பிரிக்க அணி 7.4 ஓவர்களில் 84 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டி காக் 24 பந்து களில் 35 ஓட்டங்கள் சேர்த்தார். பவுமா 24 பந்துகளில் 49 ஓட்டங்கள் சேர்த்தார்.
அதன்பின் விளையாடிய கிளாசன் 33 பந்துகளில் 66 ஓட்டங்களும் டேவிட் மில்லர் 20 பந்துகளில் 35 ஓட்டங்களும் அடிக்க தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் 223 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். ஜேசன் ராய் 7 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பட்லருடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை அனைத்து திசைகளிலும் பறக்கவிட்டனர்.
பட்லர் 29 பந்துகளில் 57 ஓட்டங்களும் பேர்ஸ்டோவ் 34 பந்து களில் 64 ஓட்டங்களும் குவித்தனர். அணித் தலைவர் இயன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 22 பந்து களில் 7 சிக்சர்களுடன் 57 ஓட்டங்கள் விளாச, இங்கிலாந்து 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அதிரடி மூலம் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை மோர்கன் தட்டிச்சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 2-1 எனக் கைப்பற்றியது.
ஏற்கெனவே டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில்
சமநிலையில் முடிந்தது.