சென்னை: இப்பருவத்துக்கான இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியை (ஐபிஎல்) டோனி தலைமையிலான சென்னை அணி வெல்லும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். வேலூர் விஐடியில் நடைபெற்ற விழாவில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் கலந்துகொண்டார்.
விழாவில் கலந்துகொண்டோரிடம் அவர் பேசினார்.
“இந்தியாவில் பஞ்சாப்பைத் தவிர்த்து அதிக ரசிகர்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. எனது 17வது வயதில் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினேன்.
“முதல் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டு களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்தது எனது சாதனையாக இன்றும் உள்ளது.
“வாழ்வில் நாம் எண்ணிய இலட்சியத்தை அடைய நாம் தொடர்ந்து கடின முயற்சியில் ஈடுபட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் நாம் முயற்சியைக் கைவிடக்கூடாது.
“தொடர்ந்து கிரிக்கெட்டில் பயணம் செய்த நான் இப்போது முதல் முறையாக படத்தில் நடிக்கிறேன். அதுவும் தமிழில் எனது முதல் படம் என்பது பெருமையாக உள்ளது. கிரிக்கெட்டில் கொடுத்த ஆதரவை எனது திரையுலகப் பயணத்திலும் நீங்கள் அளிக்க வேண்டும்.
இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டோனி விளையாடுவார். கிண்ணத்தை வெல்வோம் என நம்பிக்கை உள்ளது. மஞ்சள் சீருடை சிஎஸ்கே கிரிக்கெட் அணிக்கு அனைவரும் ஆதரவு அளியுங்கள்,” என்றார் ஹர்பஜன் சிங்.