மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்து காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மட்ரிட் குழு 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு வெற்றியாளரான லிவர்பூல் குழுவைத் தோற்கடித்தது.
ஆனாலும், ஆட்ட முடிவால் தாம் தளர்ந்து போகவில்லை என்ற லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப், “ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கிற்கு வாருங்கள், அச்சுறுத்தல் என்னவென்பதை உணர்வீர்கள்,” என்று எதிரணி ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஆட்டத்தின் முடிவு என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அட்லெட்டிகோவிற்கு வேண்டும் எனில் இது பெரிய வெற்றியாக இருக்கலாம். அதனால் மட்ரிட் விளையாட்டரங்கில் பல மகிழ்ச்சியான முகங்களைப் பார்க்க முடிகிறது. ஆயினும், மோதல் இன்னும் முடிந்துவிடவில்லை. எங்களது ஆன்ஃபீல்ட் அரங்கில் நடக்கவுள்ள இரண்டாவது ஆட்டத்திற்காகக் காத்திருக்கிறேன்,” என்றார் கிளோப்.
மட்ரிட் நகரின் ‘வாண்டா மெட்ரோபொலிட்டானா’ அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தின் நான்காவது நிமிடத்திலேயே அட்லெட்டிகோ குழு முன்னிலை பெற்றது. ‘நாக் அவுட்’ ஆட்டங்களில் எல்லாம் கோலடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ள அட்லெட்டிகோவின் சௌல் நீகெஸ் இம்முறையும் அதை நிகழ்த்திக் காட்டத் தவறவில்லை.
லிவர்பூல் கோல்காப்பாளர் அலிசன் பெக்கர் இவ்வாண்டில் விட்டுக்கொடுத்த இரண்டாவது கோல் இதுதான்.
ஆனாலும், கிளோப் நிர்வாகியாகப் பொறுப்பேற்றபின் இரண்டு ஆட்டங்கள் கொண்ட எந்தவொரு சுற்றிலும் லிவர்பூல் தோற்றதில்லை என்பதால் அடுத்த மாதம் 11ஆம் தேதி நடக்கவிருக்கும் இரண்டாவது ஆட்டத்தில் அட்லெட்டிகோவை லிவர்பூல் புரட்டியெடுக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.