லண்டன்: கடந்த பருவ யூரோப்பா லீக் காற்பந்தில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய ஆர்சனல் குழு, இம்முறை காலிறுதிக்கு முன்னதாகவே வெளியேறிவிட்டது.
கிரீசின் ஒலிம்பியாக்கோஸ் குழுவிற்கெதிரான ‘ரவுண்ட் ஆஃப் 32’ சுற்றின் முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று ஆர்சனல் முன்னிலை பெற்றது. இந்நிலையில், தனது சொந்த எமிரேட்ஸ் அரங்கில் நேற்று அதிகாலை நடந்த இரண்டாவது ஆட்டத்தில் அக்குழு 1-2 என்ற கணக்கில் தோற்றுப்போனது.
இதையடுத்து, எதிரணி அரங்கில் இரண்டு கோல் அடித்த சாதகத்துடன் ஒலிம்பியாக்கோஸ் குழு காலிறுதிக்கு முந்திய சுற்றுக்குள் நுழைந்தது.
பாப் அபு சிஸ்ஸே 53வது நிமிடத்தில் கோலடிக்க, 90 நிமிட ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கணக்கில் ஒலிம்பியாக்கோஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, ஒட்டுமொத்த கோல் கணக்கு 2-2 எனச் சமநிலை கண்டதால் ஆட்டம் கூடுதல் அரை மணி நேரத்திற்குச் சென்றது.
இதில் 113வது நிமிடத்தில் ‘பைசிக்கிள் கிக்’ மூலம் அருமையானதொரு கோலை அடித்து, ஆர்சனலை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு சென்றார் அதன் தலைவர் பியர் எமரிக் ஒபமெயாங். ஆனால், ஆட்டம் முடிய ஒன்றரை நிமிடங்களே இருந்தபோது தற்காப்பில் ஆர்சனல் வீரர்கள் சோடை போக, அதைப் பயன்படுத்திக்கொண்டு மிக எளிதாக கோலடித்தார் எதிரணியின் யூசுஃப் எல் அராபி.
ஆட்டத்தில் கடைசி முறையாக பந்தை உதைக்க ஒபமெயாங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் அவர் கோலடித்திருக்க முடியும். ஆனால், பந்து வலையைவிட்டு சற்றே விலகிச் சென்றதால் அரங்கில் இருந்த ஆர்சனல் ஆதரவாளர்கள் அனைவரும் பேரதிர்ச்சி அடைந்தனர்.
“ஆட்டத்தின் முடிவை ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருக்கிறது. கடைசி நேரத்தில் அவர்கள் கோலடித்தது எங்களின் துரதிர்ஷ்டம்,’ என்றார் ஒபமெயாங்.
இந்தத் தோல்வி தங்களுக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டார் ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்டேட்டா.பல கோல் வாய்ப்புகளை உருவாக்கிய தமது குழு, எளிதாக ஆட்டத்தை வென்றிருக்க வேண்டும் என அவர் ஆதங்கப்பட்டார்.
சகோதரிக்கு அர்ப்பணிப்பு
இதனிடையே, ஓல்டு டிராஃபர்ட் அரங்கில் நடந்த இன்னோர் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழு 5-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தின் புரூக குழுவைத் தோற்கடித்தது. முதல் ஆட்டம் 1-1 எனச் சமநிலையில் முடிந்திருந்தது. இதையடுத்து, 6-1 என ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் யுனைடெட் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
யுனைடெட்டின் அண்மைய வரவான புரூனோ ஃபெர்னாண்டஸ் 27வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியின் மூலம் கோலடித்து அதன் கோல் வேட்டையைத் தொடங்கிவைத்தார்.
அக்குழுவின் மற்றொரு புதிய வரவான நைஜீரியாவின் ஒடியன் இகாலோவுக்கும் இதுவே முதல் ஆட்டம். ஆயினும், முதல் ஆட்டத்திலேயே முத்திரை பதித்தார் 30 வயது இகாலோ. 34வது நிமிடத்தில் அவர் கோலடித்தார்.
கடந்த டிசம்பரில் திடீரென மரணமடைந்த தன் சகோதரிக்கு அவர் அந்த கோலை அர்ப்பணித்தார்.
“இதற்காகத்தான் காத்திருந்தேன். இந்தத் தருணத்தை வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன்,” என நெகிழ்ச்சியுடன் கூறினார் இகாலோ.
அதன்பின் 41வது நிமிடத்தில் மெக்டாமினே ஒரு கோலையும் கடைசி இரு கோல்களை ஃபிரெட்டும் போட்டனர்.
ஸ்பெயினின் எஸ்பேன்யோல் குழுவிற்கெதிரான ஆட்டத்தில் 3-2 எனத் தோற்றபோதும் முதல் ஆட்டத்தில் 4-0 என வென்றிருந்ததால் ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 6-3 என முன்னிலை பெற்றதால் உல்வ்ஸ் குழு காலிறுதிக்கு முந்திய சுற்றில் அடியெடுத்து வைத்தது.