கிறைஸ்ட்சர்ச்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு, நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியைப் போலவே இன்று தொடங்கவிருக்கும் இரண்டாவது போட்டியிலும் கடுமையான சோதனை காத்திருக்கிறது.
உலகின் சிறந்த பந்தடிப்பு வரிசையைக் கொண்டுள்ளதாக மார்தட்டிக்கொள்ளும் இந்திய அணி, நியூசிலாந்து வீரர்களின் வேகப் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் 200 ஓட்டங்களைக்கூட எட்ட முடியாமல் ஆட்டமிழந்தது.
இந்நிலையில், இரண்டாவது போட்டி நடக்கும் கிறைஸ்ட்சர்ச் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அத்துடன், டிம் சௌத்தி, டிரென்ட் போல்ட், கைல் ஜேமிசன், நீல் வேக்னர் என நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் நியூசிலாந்து களமிறங்கக்கூடும் என்பதால் இம்முறையும் இந்தியப் பந்தடிப்பாளர்களின் பாடு திண்டாட்டம்தான்.
இளம் வீரர் பிருத்வி ஷாவின் அணுகுமுறையில் பிழைகள் இருப்பது அப்பட்டமாகத் தெரிந்தாலும் அவர் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளார் இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி. உடற் தகுதி பெற்று நெடுநேரம் வலைப் பயிற்சியில் ஈடுபட்ட பிருத்வி களமிறங்கத் தயாராகிவிட்டார்.
அதனால், இன்னொரு இளம் வீரரான ஷுப்மன் கில் டெஸ்ட் அரங்கில் அடியெடுத்து வைக்க இன்னும் காத்திருக்க வேண்டி இருக்கும்.
இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வினுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படலாம் என பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி கோடிகாட்டியுள்ளார்.
பந்தடிப்பாளர்களின் நிலை மோசம் என்றால், பந்துவீச்சாளர்களின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக எதிரணிகளுக்குக் கிலி ஏற்படுத்தி வந்த ஜஸ்பிரீத் பும்ராவுக்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் இதுவரையிலும் மறக்க வேண்டிய ஒன்றாக அமைந்துவிட்டது. ஆனாலும், ஐந்து அல்லது ஆறு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தும் நேரம் நெருங்கிவிட்டது என்கிறார் ரவி சாஸ்திரி.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது. பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.
இதையடுத்து இந்திய அணி முதலில் பந்தடித்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 7 ஓட்டங்களில் டிரண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் விராத் கோஹ்லி, ராஹானே ஆகியோரும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி இப்போதைய நிலவரப்படி முதல் இன்னிங்ஸில் 50.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் எடுத்துள்ளது.