லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டம் கைவிட்டுப்போவது பெரும்பாலும் உறுதியாகிவிட்ட நிலையில் மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு மற்ற கிண்ணங்களுக்குக் குறிவைத்துள்ளது.
அவற்றுள் முதலாவதாக கடந்த வாரம் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றிய மேன்சிட்டியின் அடுத்த இலக்கு எஃப் ஏ கிண்ணம். அதற்கேற்ப, நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் அக்குழு ஷெஃபீல்டு வென்ஸ்டே குழுவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. நட்சத்திர ஆட்டக்காரர் செர்ஜியோ அகுவேரோ ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் அந்த கோலை அடித்தார்.
மற்றோர் ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டி 1-0 என பர்மிங்ஹம் சிட்டியை வீழ்த்தியது. டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்-நார்விச் சிட்டி குழுக்கள் 1-1 எனச் சமனில் முடிந்தபோதும் பெனால்டி வாய்ப்புகளில் 5-3 என நார்விச் வெற்றிபெற்றது. போட்டிக்குப்பின் ரசிகர் ஒருவர் ஏதோ இழிவாகக் கூறிவிட்டார் என்பதற்காக ஸ்பர்ஸ் ஆட்டக்காரர் எரிக் டயர், பார்வையாளர் பகுதிக்குள் குதித்து வாக்குவாதத்தில் இறங்க, அவ்விடமே பரபரப்பானது.
இம்மாதம் 20-22 தேதிகளில் நடக்கவுள்ள காலிறுதிச் சுற்று ஆட்டங்களில் ஷெஃபீல்டு யுனைடெட் - ஆர்சனல், மேன்சிட்டி-நியூகாசல் யுனைடெட், லெஸ்டர் - செல்சி, மான்செஸ்டர் யுனைடெட் அல்லது டார்பி - நார்விச் சிட்டி குழுக்கள் மோதவிருக்கின்றன.

