தர்மசாலா: இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
இந்தத் தொடரில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி 133 ஓட்டங்களைச் சேர்த்தால் ஒருநாள் போட்டிகளில் 12,000 ஓட்டங்களை எடுத்த இரண்டாவது இந்தியர், ஒட்டுமொத்தத்தில் ஆறாவது வீரர் என்ற சிறப்புகளைப் பெறுவார்.
சச்சின், சங்ககாரா, ரிக்கி பாண்டிங், சனத் ஜெயசூரியா, ஜெயவர்தனே ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.
இவர்கள் அனைவருமே 12,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லைத் தொட 300 இன்னிங்ஸ்களுக்கு மேல் எடுத்துக்கொண்டனர். இதுவரை 239 இன்னிங்ஸ்களில் மட்டுமே கோஹ்லி விளையாடியுள்ளார் என்பதால் அதிவேகமாக 12,000 ஓட்டங்களை எட்டிய வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார் என்பதில் ஐயமில்லை.
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் சோடை போனதால் கோஹ்லியைப் பொறுத்தமட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகளும் மிக முக்கியமானவை.
கொரோனா அச்சத்தால் இரு அணி வீரர்களும் கைகுலுக்க மாட்டார்கள் எனத் தெரிகிறது. தர்மசாலாவில் மழை பெய்து வருவதால் இன்றைய ஆட்டம் நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. 2வது போட்டி 15ஆம் தேதி லக்னோவிலும் 3வது போட்டி 18ஆம் தேதி கோல்கத்தாவிலும் நடைபெறும்.

