புதுடெல்லி: கொரோனா கிருமி நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்குள் நுழைந்துவிட்டதை அடுத்து விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அல்லது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அந்த வகையில், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா சென்றிருந்த தென்னாப்பிரிக்க அணி ஒரு போட்டியில்கூட பங்கேற்காமல் நாடு திரும்புகிறது. இம்மாதம் 12ஆம் தேதி தர்மசாலாவில் நடக்கவிருந்த முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், இன்று லக்னோவிலும் வரும் 18ஆம் தேதி கோல்கத்தாவிலும் நடைபெறவிருந்த அடுத்த இரு போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா கிருமி இதுவரை 80க்கு மேற்பட்டோரைத் தொற்றியுள்ளதை அடுத்து தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்தியாவில் தொடர்ந்து விளையாடத் தயாராக இல்லை எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக, இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்களுக்குள் ஆலோசித்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை பின்னொரு நாளில் நடத்த ஒப்புக்கொண்டன. முன்னதாக, இம்மாதம் 29ஆம் தேதி இந்தியாவில் தொடங்க இருந்த ஐபிஎல் டி20 தொடரும் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடரும் ஒரு போட்டியுடன் தள்ளிவைக்கப்பட்டது. சிட்னி அரங்கில் நேற்று முன்தினம் ரசிகர்கள் எவருமின்றி இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 71 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் வெளிநாடுகளில் இருந்து நியூசிலாந்துக்கு வரும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவர் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் அறிவித்துள்ளார். இதையடுத்து, நியூசிலாந்து அணியினர் ஆஸ்திரேலியாவில் இருந்து நேற்று மாலையே அவசர அவசரமாக சொந்த நாட்டிற்குக் கிளம்பிச் சென்றனர்.

