பாரிஸ்: கொரோனா கிருமித்தொற்று ஐரோப்பாவை முகாமிட்டுள்ளதால் இந்தப் பருவத்திற்கான சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டிகளைத் திட்டமிட்டபடி உரிய காலத்தில் நடத்தி முடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஐரோப்பாவின் அவ்விரு முக்கிய லீக் போட்டிகள் இன்னும் காலிறுதிச் சுற்றையே எட்டாத நிலையில் அவற்றின் அரையிறுதி, இறுதிச் சுற்று ஆட்டங்களை நான்கு நாட்களுக்குள் நடத்தி முடிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்கள் ஒன்றியத்தின் (யூஃபா) அவசரகால கூட்டம் காணொளிக் கலந்துரையாடல் மூலமாக இன்று நடைபெறவுள்ளது. அப்போது, சாம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதி, இறுதிச் சுற்று ஆட்டங்களை துருக்கியின் இஸ்தான்புல் விளையாட்டரங்கில் நான்கு நாட்களுக்குள் நடத்தி முடிப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று 'தி டெலிகிராஃப்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டால், யூரோப்பா லீக்கிற்கும் இதே முறை பின்பற்றப்படும். அதன்படி, போலந்தின் கடான்ஸ்க் நகரில் யூரோப்பா லீக் அரையிறுதி, இறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறக்கூடும்.
யூஃபா அவசரகாலக் கூட்டத்தில் இன்னொரு யோசனையும் முன்வைக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
காலிறுதி, அரையிறுதிச் சுற்றுகள் தலா இரு ஆட்டங்களாக நடத்தப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில், இம்முறை ஒரு போட்டி மட்டும் கொண்ட வகையில் காலிறுதி, அரையிறுதிச் சுற்றுகளை நடத்துவது குறித்தும் அவற்றை ஒரு வார காலத்திற்குள் நடத்தி முடிப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
தற்காலிகத் தடை முடிந்து வழக்கநிலை திரும்பியபின், காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட்டங்களை நடத்த யூஃபா திட்டமிடலாம்.
அத்துடன், இவ்வாண்டு இடம் பெறவுள்ள யூரோ காற்பந்துப் போட்டிகளை ஓராண்டுக்குப் பின் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி இத்தாலிய காற்பந்துக் குழுவான யுவென்டஸ் ஆட்டக்காரர் டேனியல் ருகானியை கொரோனா கிருமி தொற்றியுள்ளதால் ஒட்டுமொத்த குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதுபோல, பதின்மூன்று முறை சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்று உள்ள ஸ்பெயினின் ரியால் மட்ரிட் குழுவினரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அந்த விளையாட்டுக் குழுமத்தின் கூடைப் பந்து ஆட்டக்காரர் ஒருவரைக் கிருமி தொற்றியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆர்சனல் நிர்வாகி அர்டேட்டா, செல்சி வீரர் ஹட்சன் ஒடோய் ஆகியோரையும் கிருமி தொற்றியுள்ளது.

