ரியோ டி ஜெனிரோ: முன்னணி பிரேசில் காபற்பந்துக் குழுக்களில் ஒன்றான ஃபிளமெங்கோ நிர்வாகி ஜோர்ஜ் ஜேசுஸ் (படம்) கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
"எனக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது உண்மைதான். ஆனாலும், ஒரு மாதம், ஓராண்டு, ஈராண்டு, மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போலவே இப்போதும் உணர்கிறேன். ஓரிரு வாரங்களுக்குத் தனித்திருப்பேன். இறைவன் ஆசி இருந்தால் இயல்புநிலைக்குத் திரும்புவேன்," என்று 65 வயதான ஜேசுஸ் கூறியிருக்கிறார்.
போர்ச்சுகலைச் சேர்ந்த இவரது பயிற்சியின்கீழ் ஃபிளமெங்கோ குழு கடந்த பருவத்தில் பிரேசில் லீக் பட்டத்தையும் விடுதலையாளர்கள் கிண்ணத்தையும் கைப்பற்றியது.
இதனிடையே, முதல் சோதனை முடிவுகள் தெளிவில்லாமல் இருப்பதால் ஜேசுஸுக்கு இரண்டாவது சோதனை நடத்தவிருப்பதாக ஃபிளமெங்கோ குழு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், முதல்நிலை மற்றும் இளையர் குழுக்களுக்கான பயிற்சியையும் ஒரு வார காலம் ஃபிளமெங்கோ ரத்து செய்து இருக்கிறது.

