மெல்பர்ன்: கொரோனா கிருமி உலகெங்கும் பரவியுள்ளபோதும் திட்டமிட்டபடி இவ்வாண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனா கிருமித்தொற்றை 'பேரளவு நோய்ப் பரவலாக' உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, கிரிக்கெட், காற்பந்து உள்ளிட்ட அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் பல்வேறு நாடுகளும் ரத்து செய்து அல்லது ஒத்திவைத்து வருகின்றன.
இந்நிலையில், எந்த ஒரு பெரிய மாற்றமும் இல்லாமல் இவ்வாண்டு டி20 போட்டிகளை நடத்தத் திட்டமிட்டு வருவதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாகி கெவின் ராப்ரட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
"இன்னும் ஒரு சில வாரங்களில் அல்லது மாதங்களில் எல்லா வகை விளையாட்டுப் போட்டிகளும் மீண்டும் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். கொரோனா பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என நம்மில் எவராலும் கூற முடியாது. ஆனாலும், அக்டோபர் மாதத்திற்குள் வழக்கநிலை திரும்பி, டி20 உலகக் கிண்ணத் தொடர் இடம்பெறும் என்றும் நம்புகிறோம்," என்றார் திரு ராபர்ட்ஸ்.
மொத்தம் 12 அணிகள் பங்குபெறும் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் அக்டோபர் 18-23 தேதிகளுக்குள் நடைபெறும்.
அக்டோபர் 24ஆம் தேதி பிரதான சுற்று ஆட்டங்கள் தொடங்கும்.
அன்றைய நாளில் சிட்னி விளையாட்டரங்கில் நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளும் பெர்த் விளையாட்டு அரங்கில் நடக்கும் ஆட்டத்தில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளும் மோதும்.

