ஜூன் பள்ளி விடுமுறை வரை பள்ளி மாணவர்களுக்கு இடையிலான தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அடுத்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இரு வார காலத்திற்கு இணைப் பாட நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக அமைச்சு நேற்று தெரிவித்தது.
இவ்வாண்டுக்கான தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் கிட்டத்தட்ட 60,000 மாணவ விளையாட்டாளர்கள், 29 விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிடுவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை விளையாடப்படும்.
டென்னிஸ், பூப்பந்து, தரைப்பந்து, காற்பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகள் பாதிக் கட்டத்தைத் தாண்டியுள்ள நிலையில் அவை நிறுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, கொரோனா கிருமி சிங்கப்பூரிலும் புகுந்ததை அடுத்து கடந்த மாதம் 7ஆம் தேதி நோய்ப்பரவலுக்கான 'டோர்ஸ்கான்' விழிப்நிலை ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளை மார்ச் மாத பள்ளி விடுமுறை வரை ஒத்திவைப்பது என கல்வி அமைச்சு தீர்மானித்து இருந்தது.

