தோக்கியோ: கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என ஐயம் நிலவுகிறது. இந்நிலையில், ஒலிம்பிக் சுடரை ஏற்றிச் சென்ற விமானம் ஜப்பான் ஆகாயத் தற்காப்புப் படையின் மட்சுஷிமா தளத்தில் நேற்று தரை இறங்கியது என கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா கிருமித்தொற்றை 'பேரளவு நோய்ப் பரவலாக' உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உள்ளிட்ட பலரும் ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்குத் தள்ளிவைக்கலாம் என ஆலோசனை தெரிவித்து உள்ளனர்.
ஆனால், திட்டமிட்டபடியும் அதே வேளையில் பாதுகாப்பாகவும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் ஜப்பான் உறுதியாக இருக்கிறது.
இந்த நிலையில், பெரும்பாலும் காலியாக இருந்த நிலையில் ஒலிம்பிக் சுடரை மட்டும் ஏற்றி வந்த விமானம் ஜப்பானில் நேற்று தரைஇறங்கியது. முன்னதாக, ஒலிம்பிக் சுடரைக் கொண்டு வருவதற்காக ஒலிம்பிக் அமைச்சர் செய்க்கோ ஹஷிமோட்டோ, ஒலிம்பிக் குழுத் தலைவர் யோஷிரோ மோரி உள்ளிட்ட பேராளர்களை அனுப்ப ஜப்பான் திட்டமிட்டிருந்தது.
சுனாமியாலும் நிலநடுக்கத்தாலும் பாதிக்கப்பட்ட டோஹோக்கு பகுதிக்கு ஒலிம்பிக் சுடர் எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை 'மீட்புச் சுடர்' பயணம் என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர். அதன்பின், வரும் 26ஆம் தேதி ஃபுக்குஷிமாவில் இருந்து ஒலிம்பிக் சுடரின் அதிகாரபூர்வ 121 நாள் பயணம் தொடங்கும்.
மவுன்ட் ஃபுஜி, ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்கா, குமமோட்டோ கோட்டை உள்ளிட்ட ஜப்பானின் மிகப் புகழ்பெற்ற இடங்கள் வழியாக ஒலிம்பிக் சுடர் ஏந்திச் செல்லப்படும்.
ஒலிம்பிக் சுடர் ஏந்திச் செல்லப்படும் வழிகளில் மக்கள் கூடவேண்டாம் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். வழியில் நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன.
ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் ஓட்ட வீரர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நிலையும் உடல் வெப்பநிலையும் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக கிரீஸில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகள் தொடர்ந்து இடம்பெறும் என்ற அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தின் அறிவிப்பிற்கு பல்வேறு முன்னணி விளையாட்டாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

