ராஜ்கோட்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்தபோதும் சேத்தேஸ்வர் புஜாராவால் (படம்) ஒருநாள், டி20 போட்டிகளுக்கான அணியில் இடம்பிடிக்க முடியவில்லை.
அதற்கு புஜாராவின் மந்தமான பந்தடிப்பு வேகமே காரணம் எனக் கூறப்படுகிறது. அதனால்தான், ஐபிஎல் அணிகளும் இவரை ஏலம் எடுப்பதற்குத் தயாராக இல்லை.
ஆனால், தமது பந்தடிப்பு வேகம் குறித்து ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன என்றும் அணி நிர்வாகமோ, சக வீரர்களோ அதைப் பற்றிப் பேசுவதே இல்லை என்றும் சொல்கிறார் 32 வயதான புஜாரா.
"அணி நிர்வாகத்திடம் இருந்து எனக்கு எந்த நெருக்குதலும் இல்லை. எனது ஆட்ட பாணியையும் அதன் முக்கியத்துவத்தையும் அது நன்றாகவே அறிந்துவைத்துள்ளது," என்கிறார் இவர்.
"வீரேந்தர் சேவாக் அல்லது டேவிட் வார்னரைப் போல என்னால் அதிரடியாக விளையாட முடியாது என்பது எனக்கும் தெரியும். ஆனாலும், டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தமட்டில் ஓட்டமெடுக்கத் தொடங்க சற்று நேரம் எடுத்துக்கொள்வதில் தவறில்லை," என்றும் இவர் குறிப்பிட்டார்.

