லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தின் 2020-21 பருவம் தாமதமாகத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக இங்கிலாந்தில் பிரிமியர் லீக் உட்பட அனைத்து காற்பந்துப் போட்டிகளும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன்பின் மே மாதத்தில் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என நம்பப்படுகிறது. அப்படித் தொடங்கினாலும் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி, மூடிய அரங்குகளில் விளையாடப்படலாம்.
எஃப்ஏ கிண்ணப் போட்டிகளும் காலிறுதியுடன் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், இந்தப் பருவத்தில் பிரிமியர் லீக்கைவிட்டு வெளியேறப் போகும் குழுக்கள் எவை (ரெலிகேஷன்), அடுத்த பருவத்தில் இடம்பெறப்போகும் புதிய குழுக்கள் எவை (புரொமோஷன்) போன்றவையும் தீர்மானிக்கப்பட வேண்டி உள்ளன.
இத்தகைய சூழலில், இந்தப் பருவ ஆட்டங்கள் முழுமையாக முடிவடையும் வரை அடுத்த பருவத்தைத் தொடங்க முடியாது என்பதை எஃப்ஏ, பிரிமியர் லீக், இங்கிலிஷ் காற்பந்து லீக் ஆகிய அமைப்புகள் உணர்ந்துள்ளன.
இதன் காரணமாக, ஜூன் 1ஆம் தேதிக்குள் 2019-20 காற்பந்துப் பருவம் நிறைவுபெற வேண்டும் என்ற காலக்கெடு, கால வரம்பின்றி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
அத்துடன், கிருமித்தொற்று காரணமாக அடுத்த பருவம் தாமதமாகத் தொடங்கலாம் என்பதையும் அந்த மூன்று அமைப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியதாக 'ஈஎஸ்பிஎன்' செய்தி வெளியிட்டு உள்ளது.

