லண்டன்: கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மே 28ஆம் தேதி வரை இங்கிலாந்து, வேல்ஸ் நாடுகளில் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படாது என இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கிறது.
அதன்பின் ஜூன், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்குவது தொடர்பில் பல்வேறு தெரிவுகளை ஆராய்ந்து வருவதாக இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும், முன்னர் திட்டமிட்டபடி ஜூன் மாதத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 'டி20 பிளாஸ்ட்' போட்டிகள் ஆகியவற்றை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என வாரியம் குறிப்பிட்டுள்ளது.
ஆயினும், பிரிட்டனில் ஜூன் மாதத்தில்தான் கொரோனா கிருமித்தொற்று உச்சத்தை எட்டும் என அந்நாட்டு அரசு கணித்துள்ளதால் ஜூன் மாதத்தில் அங்கு கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்கச் சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.
"நாடு தற்போது எதிர்கொண்டுள்ள சூழலைப் பார்க்கும்போது, கிரிக்கெட் பருவத்தைத் தாமதிப்பது மிகவும் அவசியமான நடவடிக்கை," என்றார் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாம் ஹாரிசன்.
தற்காலிகத் தடைக்காலம் முடிந்த பின்னர் பொருளியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துலக, உள்ளூர் போட்டிகளை நடத்துவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு முதல் நாட்டிலுள்ள அனைத்து காப்பிக் கடைகள், மதுக்கூடங்கள், உணவகங்களை மூடும்படி பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உணவுகளை வாங்கிச் செல்ல மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

