புதுடெல்லி: ஏற்கெனவே அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இப்போது அந்தத் தொடர் நடப்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது.
கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா இம்மாதம் 31ஆம் தேதி வரை கிட்டத்தட்ட முடங்கியிருக்கும். இந்த நிலையில், எட்டு ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் காணொளி மூலம் நடத்துவதாக இருந்த கூட்டத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று ரத்து செய்துவிட்டது.
“மனிதநேயத்திற்கே முதலிடம், மற்றவை எல்லாம் அடுத்துதான். நிலைமை மேம்படாத வரை ஐபிஎல் போட்டிகளைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. ஐபிஎல் போட்டிகள் நடக்காமல் போனால் என்ன, அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே!” என்றார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான நெஸ் வாடியா.
“அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவைப் போன்ற பெரிய நாடு அனைத்து விமானங்களையும் ரத்து செய்திருப்பது மிகப் பெரிய, முன்னோக்கிய நடவடிக்கை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இப்போதைய சூழலில், ஐபிஎல் போட்டிகளைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதைப் பற்றி நினைப்பதும் பொருத்தமாக இராது. மூன்றாம் உலகப் போரைப் போன்ற சூழல் நிலவும்போது, நம் வாழ்க்கையைப் பற்றியும் அடுத்தவர்களுக்கு உதவுவதைப் பற்றியும் நினைப்பதே பொருத்தமானதாக இருக்கும்,” என்றார் பெயர் வெளியிட விரும்பாத இன்னோர் ஐபிஎல் அணியின் உரிமையாளர்.
உலகின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் பங்குபெறும் ஐபிஎல் போட்டிகள் இம்மாதம் 29ஆம் தேதி மும்பையில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கிருமித்தொற்று உலகை ஆட்டிப் படைத்து வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகள் ரத்தாகலாம் என்றே தெரிகிறது.
இருப்பினும், நிலைமை விரைவில் சீரடையலாம் என்ற நம்பிக்கையுடன் இருப்பதால் ஐபிஎல் போட்டிகள் தொடர்பில் பிசிசிஐ எந்த ஓர் அறிவிப்பையும் வெளியிடாமல் காலந்தாழ்த்தி வருகிறது.
“ஒலிம்பிக் போட்டிகளையே ஓராண்டிற்குத் தள்ளிப்போட முடியும் எனில், அதை ஒப்புநோக்கும்போது ஐபிஎல் மிகச் சிறிய போட்டித் தொடர்தான். அதை நடத்துவது நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது. இந்த நேரத்தில், வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவது குறித்து அரசாங்கம் யோசிக்கவே செய்யாது,” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் சொன்னதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி கூறியது.
இப்போதைக்கு, வருமான இழப்பைக் குறைப்பது தொடர்பில் காப்புறுதி, ஒளிபரப்பு நிறுவனங்களுடன் அணி உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.