புதுடெல்லி: இந்தியா முழுவதும் கொரோனா கிருமி அச்சுறுத்தலால் டெல்லியில் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் கெஜ்ரிவால் ஊடரங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் உள்பட வழங்க ஆணையிட்டுள்ளார்.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அப்படி ஏற்பட்டால் உபகரணங்கள் வாங்க டெல்லி அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாயை ஒதுக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் இப்போதைய பாஜக எம்.பி.யுமான கௌதம் காம்பீர் உறுதியளித்துள்ளார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கௌதம் காம்பீர் எழுதிய கடிதத்தில், ''கொரோனோ கிருமித் தொற்றில் இருந்து மக்களையும் நகரத்தையும் காப்பாற்ற நாம் ஒன்றிணைந்து முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். சிகிச்சைக்கான உபகரணங்கள் வாங்கவேண்டிய தேவை ஏற்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கத் தயாராக இருக்கிறேன்,'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேவைகளைப் பற்றி எனது அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துவதற்குப் பொறுப்பான அதிகாரிகளைத் தயவுசெய்து அமர்த்துங்கள் என்றும், என்னால் மற்ற உதவிகளும் செய்ய முடியும்," என்றும் தெரிவித்துள்ளார்.

